திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது. 2026-ம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று(செப்15) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் கட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும், விழாவில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட உள்ள நிலையில், விருது பெறுவோரின் பட்டியலையும் திமுக தலைமை ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, இன்று நடைபெற இருந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியை ஒத்திவைக்க கட்சி தலைமை முடிவு செய்தது. உடல்நலக்குறைவு காரணமாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், மு.க.ஸ்டாலினின் உடல்நிலையை கருத்தில் கொண்டே நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், முப்பெரும் விழா நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அஅவருடைய உடல்நிலை குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் ஃபோன் போட்டு விசாரித்துள்ளார்.
https://x.com/Shanmugamcpim/status/2099797333982474271?s=20
மு.க.ஸ்டாலின் உடல்நிலை பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்த அவர், அவரது நேர்முக உதவியாளர் தினேஷை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஸ்டாலினின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது, மு.க.ஸ்டாலின் இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வருவதாக தினேஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த சண்முகம், அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து நலம் பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாக வெளியான தகவல், திமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

