Sports
oi-Vigneshkumar
அமெரிக்கா: 2026 கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், போட்டி முடிந்த சற்று நேரத்திலேயே மைதானத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தோல்வியை ஏற்க முடியாத அர்ஜெண்டினா வீரர் லியாண்ட்ரோ பரேடஸ், ஸ்பெயின் வீரர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், இரண்டு வீரர்களைத் தாக்கிய சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்றைய தினம் அமெரிக்காவில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதின. இந்த போட்டி முழுக்க அனல் பறந்த நிலையில், இறுதியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது.

பரபரப்பு
இந்த வெற்றியை ஸ்பெயின் வீரர்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவிடம் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் பரேடஸ் திடீரென சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கார்சியாவை பரேடஸ் இரண்டு முறை குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சக வீரரான கார்சியாவை காப்பாற்ற கவி என்ற வீரர் தலையிட்டு இருவரையும் பிரிக்க முயன்றார். அப்போது ஆவேசமடைந்த பரேடஸ், கவியை நோக்கியும் கையை ஓங்கினார்.
மோதல்
இதைப் பார்த்த மற்றொரு அர்ஜெண்டினா வீரர் தியாகோ அல்மடா, பரேடஸை தடுக்க முயன்று கவியை கீழே தள்ளினார். இருப்பினும், பரேடஸின் கை கவியின் முகத்தில் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மைதானத்தில் பதற்றம் அதிகரித்த நிலையில், அர்ஜெண்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி விரைந்து வந்து தனது வீரர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றார். இந்த சம்பவத்திற்காக லியாண்ட்ரோ பரேடஸுக்கு ரெட் கார்டு காட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இறுதி போட்டி
முன்னதாக நடந்த இறுதிப்போட்டியில் அனல் பறந்தது என்றே சொல்லலாம். முதல் 90 நிமிடங்களும் இரு அணிகளுமே கோல் போட தீவிரமாக முயன்றன. இருப்பினும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய ஸ்பெயினின் பெர்ரான் டோரஸ் அடித்த கோல் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் முன்னிலை பெற்றது.
அதன் பிறகு அர்ஜெண்டினா கோல் அடிக்க எவ்வளவோ முயன்றது. இருப்பினும், கடைசி வரை ஸ்பெயினின் தடுப்பு ஆட்டத்தைத் தாண்டி அர்ஜெண்டினா அணியால் கோல் அடிக்கவே முடியவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் கோப்பையை வென்றது. 2010க்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து ஸ்பெயின் மீண்டும் உலகக் கோப்பையை வென்றுள்ளது.
ஸ்பெயின்
இரு அணிகளுமே கோல் போட முயன்றாலும் போட்டி முழுவதும் ஸ்பெயின் கை தான் ஓங்கி இருந்தது. இப்போட்டியில் ஸ்பெயின் மொத்தம் 20 முறை கோல் அடிக்க முயற்சி செய்தது. மறுபுறம், அர்ஜெண்டினா கூடுதல் நேரத்தின் இறுதிக் கட்டம் வரை ஒரு முறைகூட கோல் முயற்சியைப் பதிவு செய்ய முடியவில்லை. மேலும், அர்ஜெண்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டதால், அர்ஜெண்டினா 10 வீரர்களுடன் மட்டுமே விளையாடியது. இதுவே அர்ஜெண்டினாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
சாதனை
இந்த ஒட்டுமொத்த உலக கோப்பையில் ஸ்பெயின் அணிக்கு எதிராக ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த கோல் விட்டுக்கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையையும் ஸ்பெயின் படைத்தது. மேலும், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையை அடுத்தடுத்து இரண்டு முறை வென்ற ஒரே நாடு என்ற பெருமையையும் தக்க வைத்துள்ளது.
நடப்பு சாம்பியனாக களமிறங்கிய லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினாவால் பட்டத்தை தக்க வைக்க முடியவில்லை. இந்த மெஸ்சி தான் அர்ஜெண்டினாவைத் தனி ஆளாகத் தூக்கிச் சென்றார் என்றே சொல்லலாம். அவர் 8 கோல்கள் மற்றும் 4 அசிஸ்ட்களை பதிவு செய்திருந்தாலும், அணியை மீண்டும் சாம்பியனாக்க முடியவில்லை.


