ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்; ஒரே இரவில் கைதான 133 ரௌடிகள் – எஸ்கேப்பான ஏ பிளஸ்… தொடரும் நடவடிக்கை!

Spread the love

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில், 12 காவல் மாவட்ட போலீஸார், 4 மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்று ஒரே நாளில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் சரித்திர பதிவேடு ரௌடிகளான 133 பேர் சிக்கினர். அதைத் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு எதிராகச் சிறப்பு ரெய்டும் நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் 101 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 21.4 கிலோ கஞ்சா மற்றும் 1,070 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அபின் தினேஷ் மோதக்

இது குறித்து சென்னை போலீஸார் கூறுகையில், “ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன் என்ற பெயரில் நேற்றிரவு இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இதில் தி.நகர் காவல் மாவட்டத்தில் 18 ரௌடிகளும் அடையாறு காவல் மாவட்டத்தில் 16 ரௌடிகளும் புளியந்தோப்பில் 20 ரௌடிகளும் அண்ணாநகரில் 9 ரௌடிகளும் மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 12 ரௌடிகளும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் குற்ற வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர்கள். நாங்கள் நடத்திய ரெய்டில் சிலர் தப்பி விட்டனர். அவர்களைக் கைதுசெய்யவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். சென்னையைக் குற்றமில்லாத நகரமாக மாற்ற இந்த நடவடிக்கை தொடரும்” என்றனர்.

ஒரே நாளில் 133 ரௌடிகளைக் கைதுசெய்திருப்பதாக சென்னை போலீஸார் தெரிவித்திருந்தாலும், முக்கிய ஏ பிளஸ் ரௌடிகளில் சிலர் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். அவர்களைப் பிடிக்க போலீஸார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *