திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கா நகரில் (ஸ்ரீரங்கம் பழைய பஸ் ஸ்டாண்டு) நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸாரும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரும் காங்கிரஸ் அலுவலகத்தில் தீவிர சோதனை செய்தனர்.
அப்பொழுது, அங்கிருந்து குட்கா பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தக் குட்கா பொருட்களை ஸ்ரீரங்கம் பகுதி காங்கிரஸ் நிர்வாகியான நடராஜன் என்கிற பாதயாத்திரை நடராஜன் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதனை அடுத்து, போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.