திருச்சி: காதலனுடன் விடுதியிலிருந்த இளம்பெண் மரணம்; போதை ஊசி காரணம்?

Spread the love

திருச்சி, அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சம் உசேன்(வயது: 19). இவர், அரியமங்கலத்தைச் சேர்ந்த 18 வயது யாஸ்மின் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். 12-ம் வகுப்பு வரை படித்துள்ள அந்தப் பெண் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் வேலைக்காக அவ்வப்போது சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 1 – ம் தேதி அந்தப் பெண் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். தொடர்ச்சியாக வேலை இருப்பதால் வீட்டிற்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் வேலைக்கு எங்கும் செல்லாமல் தன்னுடைய காதலன் சதாம் உசேனுடன் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளார்.

investigation

இந்த நிலையில், இருவரும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். மதியம் இருவரும் உணவு அருந்திய பின் சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், செய்வதறியாது இருந்த காதலன் சதாம் உசேன், தன்னுடைய நண்பர் ஷேக் அப்துல்லாவை உதவிக்கு அழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு அந்தப் பெண்ணை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இருவரும் அந்தப் பெண்ணை திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சதாம் உசேன் மற்றும் சேக் அப்துல்லா இருவரையும் கண்ட்டோண்மென்ட் காவல் நிலைய போலீஸார் அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

சதாம் உசேனுக்கும், அந்தப் பெண்ணுக்கும் போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, அந்தப் பெண் அதிக அளவு போதை மருந்து பயன்படுத்தி அவர் மயங்கி உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், உணவு அருந்திய பின்புதான் அந்தப் பெண் உயிரிழந்ததாக அவருடைய காதலன் சதாம் உசேன் தெரிவித்துள்ளார். இதில், எது உண்மை என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

investigation

காவல்துறை துணை ஆணையர் சிருஷ்டி சிங், சதாம் உசேன் மற்றும் சேக் அப்துல்லா இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, அவர்கள் தங்கி இருந்த விடுதி அறையில் இருந்து போதை மாத்திரைகள், ஊசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த 2024 -ம் ஆண்டு சதாம் உசேன் மீது, உயிரிழந்த பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு உள்ளது. அதன் அடிப்படையில் அவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போதை மருந்து பயன்படுத்தியதால் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *