ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகில் உள்ள சிக்ரோனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சந்தியா(29) என்ற ஆசிரியைப் பணியாற்றி வந்தார். பள்ளிக்குச் சற்று தொலைவில்தான் போலீஸ் நிலையம் இருக்கிறது. ஆசிரியை சந்தியா இன்று காலை பள்ளியில் இருந்தார். அந்நேரம் முகமூடி அணிந்த நபர் ஒருவர் வாயில் வழியாக நடந்து சென்று சந்தியாவின் பெயரைக் கூறி கேட்டார்.
இது குறித்து சந்தியாவிற்கு தகவல் கொடுத்தவுடன் சந்தியா அந்த நபரைச் சந்திக்க பள்ளி கேட் அருகில் வந்தார். வெளியே வந்தவுடன் சந்தியாவிடம் முகமூடி அணிந்த நபர் அவரின் பெயரைக் கேட்டுள்ளார்.
சந்தியா பெயரைச் சொன்னவுடன் முகமூடி அணிந்திருந்த நபர் சந்தியாவைச் சரமாறியாக கத்தியால் குத்த ஆரம்பித்தார். இதில் சந்தியா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். ஆசிரியைச் சத்தம் கேட்டு பள்ளி நிர்வாகி ஓடி வந்தார். ஆனால் அவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி அருகில் வரவிடாமல் செய்துவிட்டார்.
பின்னர் மீண்டும் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தியாவிடம் சென்று அவரை வயிறு மற்றும் முகத்தில் கத்தியால் மீண்டும் குத்தினார்.
30 விநாடியில் 35 முறை குத்தினார். பின்னர் அந்த நபர் பைக்கில் தப்பிச்சென்றுவிட்டார்.
சம்பவ இடத்தில் சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இக்காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதில் முகமூடி அணிந்த நபர் பள்ளிக்குள் நுழைந்து லாபியில் காத்திருப்பதைக் காட்டுகிறது. அவர் ஆசிரியரைக் கண்டவுடன், அவர் ஆசிரியையை வெளியே செல்லும்படி சமிக்ஞை செய்கிறார்.
அதனைத்தொடர்ந்து சந்தியாவின் கழுத்தைப் பிடித்து வெளியே இழுத்து கத்தியால் குத்துவது அதில் பதிவாகி இருந்தது. கத்தியால் குத்திய நபரின் பெயர் அமித் என்று தெரிய வந்தது. அவரை போலீஸார் உடனே கைது செய்தனர்.
அமித் மீது சந்தியா மானபங்க புகார் கொடுத்திருந்தார். அப்படி இருந்தும் சந்தியாவிடம் பேச அமித் முயற்சி செய்தார். ஆனால் சந்தியா அதனைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் அடிக்கடி சந்தியாவைப் பின்தொடர்வதை அமித் வழக்கமாகக் கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளார். பள்ளி வளாகத்திற்குள் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.