ஹோம் லோனில் ரூ.7 லட்சம் வரை சேமிக்கலாம்! இந்த ஒரு ட்ரிக் தெரிந்தால் போதும்! | How Couples Can Split a Home Loan to Save Up to ₹7 Lakh in Taxes alone, a simple explainer

Spread the love

Business

oi-Vigneshkumar

சென்னை: நம்ம ஊரில் சொந்த வீடு என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் கனவாகவே இருக்கிறது. இந்த சொந்த வீடு கனவை அடையப் பலரும் ஹோம் லோன் எடுக்கிறார்கள். ஆனால், அப்படி ஹோம் லோன் எடுக்கும்போது நமக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கவே செய்கிறது. அதை பெரும்பாலும் நாம் மிஸ் செய்துவிடுகிறோம். அப்படி நமக்குக் கிடைக்கும் சலுகை ஒன்று தொடர்பாகப் பார்க்கலாம்!

சொந்த வீடு வாங்குவது பெரும்பாலான இந்தியர்களின் கனவாக உள்ளது. ஆனால், வீடு வாங்கிய பிறகு பல ஆண்டுகள் மாதந்தோறும் ஹோம் லோன் இஎம்ஐ செலுத்துவது பல குடும்பங்களுக்குப் பெரிய நிதிச்சுமையாக மாறுகிறது. இந்த சுமையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், வருமான வரியிலும் அதிக சலுகை பெற ஒரு எளிய வழி உள்ளது. அது தான் கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்குவது.

Home Loan personal finance

கவனிக்க வேண்டியவை

ஆனால், இருவரின் பெயரிலும் கடன் வாங்கினாலே போதும்.. இதில் சலுகை கிடைக்கும் என்று நினைத்தால் அது தவறு. வருமான வரித்துறையின் சில முக்கிய விதிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே முழு வரி சலுகையைப் பெற முடியும். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

பழைய வருமான வரி முறையைத் தேர்வு செய்திருப்பவர்கள் வீட்டுக் கடனுக்கு இரண்டு வகையான முக்கிய வரிச்சலுகைகளைப் பெறலாம். முதலில் பிரிவு 24(b) வரி சலுகை.. சொந்தமாக வசிக்கும் வீட்டுக்காகச் செலுத்தும் வட்டிக்கு (Interest) ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரிச்சலுகை கிடைக்கும். அடுத்து பிரிவு 80C.. வீட்டுக் கடனின் அசல் தொகையைத் திருப்பிச் செலுத்த ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம். இதன்படி, ஒருவருக்கு மொத்தம் ரூ.3.5 லட்சம் வரை வரிச்சலுகை கிடைக்கும். கணவன், மனைவி இருவரும் இந்த சலுகைக்குத் தகுதி பெற்றால், மொத்தமாக ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமான வரி கழிவைப் பெற முடியும்.

நிபந்தனைகள்

அதேநேரம் இதற்கு சில நிபந்தனைகளும் இருக்கவே செய்கிறது. முதலில் கணவன் மனைவி என இருவருமே வீட்டின் உரிமையாளர்களாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான விதிமுறையாகும். வங்கியில் ஹோம் லோனில் இருவரின் பெயரும் இருந்தால் மட்டும் போதாது. வீட்டின் விற்பனைப் பத்திரம் அல்லது உரிமைப் பத்திரத்தில் கணவன், மனைவி இருவரின் பெயரும் இருக்க வேண்டும். உதாரணமாக, கடனில் இருவரின் பெயரும் இருந்தாலும், ஹோம் ஓனர் என்ற இடத்தில் ஒருவரின் பெயர் மட்டுமே இருந்தால், மற்றவருக்கு வரிச்சலுகை கிடைக்காது.

அதேபோல EMI-யை ஒருவர் மட்டுமே செலுத்தினால், வரிச்சலுகையும் அவருக்கு மட்டுமே கிடைக்கும். எனவே, கணவன் – மனைவி இருவரும் தங்களுடைய தனிப்பட்ட வருமானத்தில் இருந்து வீட்டுக் கடன் தவணையைச் செலுத்த வேண்டும். யார் எவ்வளவு தொகை செலுத்துகிறார்களோ, அதற்கேற்ப அவர்கள் வரி சலுகையைக் கோர முடியும்.

பழைய வருமான வரி முறை

எல்லாவற்றையும் விட முக்கியமாகப் பழைய வருமான வரி முறையைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.. தற்போது இந்தியாவில் புதிய வருமான வரி முறை (New Tax Regime) தான் டிபால்ட் தேர்வாக இருக்கிறது. அதை மாற்ற வேண்டும். ஏனென்றால் புதிய முறையைத் தேர்வு செய்தால், சொந்தமாக வசிக்கும் வீட்டுக்கான பிரிவு 24(b) மற்றும் பிரிவு 80C-இன் கீழ் இந்த வரி சலுகைகளைப் பெற முடியாது. எனவே, அதிகபட்ச வரிச்சலுகையைப் பெற விரும்பும் தம்பதிகள் பழைய வருமான வரி முறையிலேயே தொடர வேண்டும்.

உதாரணம்

ஒரு எளிய உதாரணம் பார்க்கலாம். ரவி மற்றும் பிரியா ஆகிய இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் இருவரும் சேர்ந்து சென்னையில் ரூ.60 லட்சத்திற்கு வீடு வாங்கி, கூட்டாக ஹோம் லோன் பெற்றுள்ளனர். வீட்டின் உரிமைப் பத்திரத்திலும் இருவரின் பெயரும் உள்ளது. மாதந்தோறும் EMIயையும் இருவரும் தங்களது வங்கி கணக்கில் இருந்து செலுத்துகின்றனர் என வைத்து கொள்வோம்.

அப்படி என்றால் வருமான வரித்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால், ரவிக்கும் தனியாக வரிச்சலுகை கிடைக்கும்.. பிரியாவுக்கும் தனியாக வரிச்சலுகை கிடைக்கும். இதன் மூலம், குடும்பத்தின் மொத்த வரிச்சுமை கணிசமாகக் குறையும்.

கவனிக்க வேண்டியது

இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால்.. வீட்டுக் கடன் கூட்டாக வாங்குவது மட்டுமே போதாது. கடன், வீட்டின் உரிமை, EMI செலுத்துவது, வருமான வரி முறை ஆகிய அனைத்தும் சரியாக இருந்தால்தான் முழு வரிச் சலுகையைப் பெற முடியும். எனவே, வீடு வாங்குவதற்கு முன்பே இந்த விஷயங்களைத் திட்டமிட்டால், மாதாந்திர கடன் சுமையையும் குறைக்க முடியும்; அதே நேரத்தில் ஆண்டுதோறும் கணிசமான வரியையும் சேமிக்க முடியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *