கும்பகோணம் மங்களாம்பிகை: மாங்கல்யம், மந்திர சக்தி அருளும் அன்னையின் மகிமை! – Kumudam

Spread the love

கோயில்களின் நகரம் என்று போற்றப்படும் கும்பகோணத்தின் பெருமைக்கும் பெயருக்கும் காரணமாகத் திகழ்வது. ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில். இங்கே அருளும் இறைவனுக்கே மங்களங்களை அருள்பவளாகத் திகழ்பவள், மங்களாம்பிகை. 

சகல மந்திரங்களுக்கும் தாயான மந்திரபீடேஸ்வரியாகப் போற்றப்படுபவள் இத்தலத்தின் அம்பிகையான மங்களாம் பிகை காவிரியின் தென்கரையில் அமைந் துள்ள இக்கோயில், திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் பாடப்பெற்ற தலம் உலகம் பிரளயப் பெருவெள்ளத்தால் அழியும் நிலை வந்தபோது, படைப்புத் தொழிலை மீண்டும் எங்கிருந்து, எப்படித் தொடங்குவது என்று பிரும்மதேவர் சிவபெருமானிடம் கேட்டார்.

அதற்கு சிவபெருமான், “அமுதத் தையும் படைப்புக்கான விதைகளையும் ஒரு கலசத்தில் (கும்பம்) வைத்து, அதை அலங்கரித்து பிரளய நீரில் மிதக்க விடு” என்று கூறினார். அதற்கு சிவபெருமான், “அமுதத் தையும் படைப்புக்கான விதைகளையும் ஒரு கலசத்தில் (கும்பம்) வைத்து, அதை அலங்கரித்து பிரளய நீரில் மிதக்க விடு” என்று கூறினார். பிரளய வெள்ளத்தில் பல காலம் மிதந்து வந்த அந்த அமுதக் கலசம் தங்கிய இடம்தான் தற்போதைய கும்பகோணம். சிவபெருமான் ஒரு வேடுவன் (கிராத மூர்த்தி) உருவம் தாங்கி வந்து, அந்த அமுதக் கலசத்தின் மீது அம்பெய்து உடைத்தார்.

அதிலிருந்து அமுதம் நாலாபுறமும் சிதறி விழுந்தது. அமுதமும், அங்குள்ள மணலும் கலந்த கலவையைக் கொண்டு சிவபெருமான் ஒரு லிங்கத்தை உருவாக்கி, தன்னைத்தானே வணங்கி, அந்த லிங்கத்திலேயே தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். அவரே ‘ஆதி கும்பேஸ்வரர்’ ஆவார். கும்பத்தின் மூக்கு உடைந்ததால் இவ்வூருக்கு ‘குடமூக்கு’ என்ற பழம்பெயரும் உருவானது.

இத்தலத்தில்தான் தானே தோன்றிய ஈசனுடன், மங்களகாரணியாக அம்பாள் ‘மங்களாம்பிகை’ என்ற பெயருடன் திகழ்கிறாள். பெயருக்கேற்றாற்போல் பக்தர்களின் வாழ்வில் மங்களங்களை வாரி வழங்கும் இந்த அம்பாளைப் பற்றிப் பலரும் அறியாத சிலிர்ப்பூட்டும் ஆன்மிக ரகசியங்கள் பல உள்ளன. சதி தேவியின் உடல் பாகங்கள் இடங்கள், சக்தி பீடமாகப் போற்றப்படுவது தெரிந்ததுதான். அந்த ஐம்பத்தொரு சக்தி வடிவங்களையும் தன்னுள் ஒன்றாக உள்ளடக்கியவள், இந்த மங்களாம்பிகை. கேசாதி பாதம் வரை ஐம்பத்தொரு சக்தி பாகங்களாக இத்தலத்தில் முழுமையாகக் காட்சியளிக்கிறாள் அம்பிகை. இது வேறு எந்தவொரு சக்தி பீடத்திலும் காண முடியாத சிறப்பாகும்.

மங்களாம்பிகையின் சிறப்புப் பெயர் ‘மந்திரபீடேஸ்வரி’. இதற்குப் பின்னால் புராண ரகசியம் ஒன்று உள்ளது. அது, ஆதிசிவன் தன்னிடம் இருந்த சரிபாதி உரிமையான முப்பத்து ஆறாயிரம் கோடி மந்திர சக்திகளை இத்தலத்தில் அம்பாளுக்கு அன்பளிப்பாக வழங்கினார் என்பதுதான்.

அம்பாளிடம் ஏற்கெனவே இருந்த முப்பத்து ஆறாயிரம் கோடி மந்திர சக்திகளுடன், சிவனின் சக்தியும் சேர, மொத்தம் எழுபத்து இரண்டாயிரம் கோடி மந்திர சக்திகளுக்கும் ஏகாதிபதியாக மங்களாம்பிகை இங்கு அருளாட்சி செய்கிறாள். இவளை நினைத்து ஒரு சாதாரண மந்திரத்தை உச்சரித்தாலும், அது பல ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்பது ஐதிகம்.

பொதுவாக சிவாலயங்களில் சிவனைத் தனியாகவும், அம்பாளைத் தனியாகவும் பிரதக்ஷணம் செய்யும் படியாக அமைந்திருக்கும். இக்கோயிலில் இருவரையும் சேர்த்தே பிரதக்ஷணம் செய்யும்படியாக அமைந்திருப்பது சிறப்பு. மங்களாம்பிகை, தன் பக்தர்களின் மரண பயம், நவகிரக தோஷங்கள், செய்வினை போன்ற எதிர்மறை சக்திகள் அனைத்தையும் தடுத்து, அபயம் அளிக்கும் மங்கள சொரூபியாகத் திகழ்கிறாள்.

திருமணத் தடைகள் நீங்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் மங்களாம்பிகையை வழிபடுவது மிகச் சிறந்த பரிகாரமாகும். அம்பாளின் வலது கரத்தில் சாத்தப்பட்ட தாலிச்சரடுகள் பக்தைகளுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை அணிந்து கொண்டால், பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மங்களாம்பிகையை அந்தி வேளையில் தரிசித்தால், தீராத கர்ம வினைகளும் நீங்கிவிடுமாம். மகா சித்தரான அகத்திய முனிவர் இத்தலத்தில் சூட்சுமமாக ஐக்கியமாகி இருப்பதால்தான் இந்த அளவு சக்தி இங்கு நிலவுவதாகக் கூறுகின்றனர். இங்கு அமர்ந்து தியானம் செய்தால் மனம் ஒருமைப்படுவதோடு, அபாரமான ஞானமும் கிடைக்குமாம்.

மங்களாம்பிகையின் பெருமையை உலகறியச் செய்ய, தமிழ்த்தாத்தா உவேசா அவர்களின் குருவான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், ‘மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்’ என்ற அற்புதமான நூலை இயற்றியுள்ளார். இதில் அம்பாளைத் தளர்நடை பயிலும் ஒரு சிறு குழந்தையாக பாவித்து, பத்துப் பருவங்களாகப் பிரித்து மிக அழகாகப் பாடியுள்ளார். “மங்களாம்பிகையைக் கண்டாலே பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரங்கள் யாவும் பறந்தோடும்” என அவர் மெய்சிலிர்த்துப் பாடியுள்ளது அம்பாளின் எல்லையில்லாக் கருணைக்குச் சான்றாகும்.

கும்பகோணம் செல்பவர்கள், ஆதி கும்பேஸ்வரரை தரிசித்து, அன்னை மங்களாம்பிகையிடம் மாங்கல்யப் பிரசாதம் பெற்று வருவது வாழ்வில் மங்களங்கள் நிறையச் செய்யும். நிலைக்கச் செய்யும். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *