Sports
oi-Yogeshwaran Moorthi
நியூ ஜெர்சி: 10 ஆண்டுகளுக்கு முன் அர்ஜென்டினா அணியின் ஜாம்பவான் வீரர் லியோனல் மெஸ்ஸி மெட்லைஃப் மைதானத்தில் ஓய்வை அறிவித்திருந்தார். தற்போது 10 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அதே மைதானத்தில் ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இந்தப் போட்டியே அவரின் கடைசி போட்டியாகவும் அமைய வாய்ப்புகள் உள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இறுதிப் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. டிஃபெண்டிங் சாம்பியனான அர்ஜென்டினா அணியும், வலிமை வாய்ந்த ஸ்பெயின் அணியும் மோதுகின்றன. நட்சத்திர வீரர்களான மெஸ்ஸியும், ஸ்பெயின் அணியின் லமின் யமாலும் நேருக்கு நேர் மோதுவதை பார்க்க உலகமே காத்திருக்கிறது.

2வது முறையாக ஃபிஃபா உலகக்கோப்பையை மெஸ்ஸி கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்தப் போட்டியை பொறுத்தவரை ஸ்பெயின் டிஃபென்ஸ் vs அர்ஜென்டினா அட்டாக் இடையில் தான் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே மெஸ்ஸி ரசிகர்களுக்கு இந்தப் போட்டி ஒரு எமோஷனல் ரைடாக மாறி இருக்கிறது.
ஏனென்றால் ஸ்பெயின் – அர்ஜென்டினா இடையிலான ஆட்டம் நியூ ஜெர்சியில் உள்ள மெட் லைஃப் மைதானத்தில் நடக்க உள்ளது. 2016ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் சிலி அணியிடம் அர்ஜென்டினா தோல்வி அடைந்தது. இந்த இறுதிப் போட்டியால் மனமுடைந்த மெஸ்ஸி, திடீரென சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
நியூ ஜெர்சி மெட் லைஃப் மைதானத்தில் தான் மெஸ்ஸி ஓய்வை அறிவித்தார். இதன்பின் மெஸ்ஸி மீண்டும் கம்பேக் கொடுத்து 2 கோபா அமெரிக்கா, ஃபிஃபா உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளார். தொடர்ந்து 2வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருக்கும் மெஸ்ஸி, நியூ ஜெர்சியின் மெட் லைஃப் மைதானத்தில் விளையாட இருக்கிறார்.
இது ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் மெஸ்ஸி ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இருப்பதால், ரசிகர்கள் இப்போதே சோகத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் மெஸ்ஸியின் ஒன் லாஸ்ட் டான்ஸை பார்க்க ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்துள்ளது.