வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள ரங்காபுரத்தில் வசித்து வருபவர் தினேஷ் சரவணன். மென்பொருள் பொறியாளரான இவர்… கோடைக்காலத்தில் பறவைகளின் தாகம் தணிக்கத் தனித்துவமான ஏற்பாடு செய்தல், ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடுதல், சிறைச்சாலைகளில் பசுமைப் பணி செய்தல், பாலாற்றைத் தூய்மைப்படுத்துதல், நாட்டு ரக விதைகளைச் சேகரித்துப் பரவலாக்கம் செய்தல், மலைப் பகுதிகளில் டிரோன் மூலம் விதைப்பந்துகளை வீசுதல், பொது இடங்களில் மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த வருடமும் மலைப் பகுதிகளில் விதைப்பந்துகளை வீசுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் தினேஷ் சரவணன். இதற்காக, ஸ்ரீபுரம் தங்கக் கோயிலின் பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டமான `கிரீன் சக்தி’யுடன் இணைந்து 10 லட்சம் விதைப்பந்துகளைத் தயாரிப்பதற்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறார்.
மாணவ – மாணவிகள் விதைப்பந்து தயாரிப்புப் பணியில் ஆர்வம் காட்டுவதால், அவர்களிடம் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் தினேஷ் சரவணன்.
இதுபற்றி, தினேஷ் சரவணன் கூறுகையில், “வேலூர் மாவட்ட மலைப்பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, இந்த வருடம் 10 லட்சம் விதைப்பந்துகளைத் தயாரித்து வீச இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். பெருநாவல், சிறுநாவல், கொடுக்காய்ப்புளி, அத்தி, வேங்கை, வேம்பு, சரக்கொன்றை, மயில் கொன்றை உள்ளிட்ட நாட்டு மர விதைகளைச் சேகரித்துக் கொண்டுவந்து, அதோடு மண், மணல், எரு கலந்து விதைப்பந்துகள் தயார்ச் செய்கிறோம்’’ என்றார்.