அண்ணன் வைபவ் எப்படி பந்துவீச்சாளர்களை இரக்கமின்றி ஆக்ரோஷமாக எதிர்கொள்வாரோ, அதே பாணியைத்தான் தம்பி ஆசீர்வாத்தும் கையில் எடுத்துள்ளார். இருவருக்குமே களத்தில் தற்காப்பு ஆட்டத்தை விட, முதல் பந்திலிருந்தே அதிரடியாக மட்டையைச் சுழற்றி ஆதிக்கம் செலுத்துவதுதான் மிகவும் பிடிக்கும்.
அண்ணனின் ஆட்டத்தை நேரில் பார்த்து வளர்ந்ததால், அதே போன்றதொரு வெறியோடு சிறு வயதிலேயே தீவிர கிரிக்கெட் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் ஆசீர்வாத்.
ஆசீர்வாத்தின் இந்த முதல் சதத்தின் புகைப்படங்கள், ஸ்கோர்கார்டை அவரது மூத்த சகோதரர் உஜ்வால் சமூக வலைத்தளங்களில் பகிர, அது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இளைய மகனின் இந்த வியக்க வைக்கும் சாதனையை எண்ணிப் பூரித்துப் போயிருக்கிறார் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி. “இன்று ஆசீர்வாத் தனது முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளார். உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் அவருக்கும் கிடைக்க வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அண்ணன் வைபவ் போலவே அவனையும் ஒரு மிகச்சிறந்த அதிரடி கிரிக்கெட் வீரராக உருவாக்குவதே எனது லட்சியம்,” என்று உணர்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்திய அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷியும், தனது தம்பியின் இந்தச் பிரமாண்டமான தொடக்கத்தைக் கொண்டாடும் விதமாக, இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரி மூலம் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு வைபவ் சூர்யவன்ஷியே எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக உருவெடுத்து வரும் நிலையில், வெறும் 10 வயதிலேயே அண்ணனைப் போல ரன் மழை பொழியும் ஆசீர்வாத்தின் வருகை, இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு அபூர்வமான பொக்கிஷம்.
இருவரின் ஆட்டத்தையும் ஒரே மைதானத்தில், ஒரே இந்திய அணிக்காக காணும் நாளுக்காக கிரிக்கெட் உலகம் இப்போதே காத்திருக்கத் தொடங்கிவிட்டது!