ஓரிரு ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் வெடிப்பு!
எத்தியோப்பியாவின் எர்டா அலெ மலைத்தொடரில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை, ஞாயிற்றுக்கிழமை காலை வானத்தில் உயரமாகச் சாம்பல் மற்றும் சல்பர் டை ஆக்சைடு வாயுவின் தூண்களைக் கக்கியுள்ளது.
துலூஸ் எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் (Toulouse Volcanic Ash Advisory Centre) செயற்கைக்கோள் மூலம் நடத்திய மதிப்பீடுகளில், இந்த சாம்பல் புகை 10 கி.மீ முதல் 15 கி.மீ உயரம் வரை எழுந்து செங்கடலைக் கடந்து கிழக்கு நோக்கிச் செல்வதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சாம்பல் மேகம் ஏற்கனவே ஓமன் மற்றும் எமான் பிராந்தியங்களைப் பாதித்துள்ளது; மேலும், சுற்றுச்சூழல் மற்றும் விமானப் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘கலீஜ் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓமன் சுற்றுச்சூழல் ஆணையம் (Oman’s Environment Authority) எரிமலை வாயு மற்றும் சாம்பலால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளது.
எரிமலையின் இருப்பிடம் வெகு தொலைவில் இருந்தாலும், வலுவான வெடிப்பினால் சாம்பல் புகை வணிக விமானங்கள் பயணிக்கும் உயரத்தை எட்டியுள்ளது. ஏமன் மற்றும் ஓமன் முழுவதும் பரவி மேலும் கிழக்கு நோக்கிச் செல்வதால், இந்தியாவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.