Cricket
oi-Yogeshwaran Moorthi
ஓவல்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தின் போது, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்னைக் கடந்து அசத்தினார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 14,000 ரன்கள் என்ற இமாலய ரன்களை எட்டிய உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பு இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 14,000 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரராக முதலிடத்தில் நீடித்து வந்தார். அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களுடன் ஓய்வு பெற்றார்.

தற்போது சச்சினுக்கு அடுத்தபடியாக, ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் போன்ற ஜாம்பவான்களால் கூட எட்ட முடியாத இந்த 14,000 ரன்கள் என்ற மைல்கல்லை ஜோ ரூட் மிக வெற்றிகரமாக எட்டிப் பிடித்துள்ளார். 35 வயதான ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரை விட குறைந்த போட்டிகளிலேயே இந்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது 171வது டெஸ்ட் போட்டியில் தான் 14,000 ரன்களைக் கடந்தார். ஆனால், ஜோ ரூட் தனது 165வது டெஸ்ட் போட்டியிலேயே இந்த இமாலய மைல்கல்லை எட்டி, மிக அதிவேகமாக 14,000 ரன்களைக் குவித்த வீரர் என்ற புதிய வரலாற்றையும் எழுதியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அசுர வேகத்தில் ரன்களை ஜோ ரூட் குவித்து வருகிறார்.
இதன் மூலமாக இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் ஏற்கனவே அலாஸ்டர் குக்கை முந்தி முதலிடத்தில் உள்ளார். தற்போது சச்சினின் உலக சாதனையான 15,921 ரன்களை உடைக்க ஜோ ரூட்டுக்கு இன்னும் 1,921 ரன்கள் மட்டுமே தேவை என்ற சூழலில், அவர் தொடர்ந்து இதே ஃபார்மில் விளையாடினால் எளிதாக அந்த சாதனையை முறியடிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.
ஜோ ரூட்டிற்கு வயது மற்றும் ஃபார்ம் ஆகியவை சாதகமாக இருப்பதால், உலகிலேயே அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை விரைவில் முறியடிப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர். அதற்கு இன்னும் 20 முதல் 25 டெஸ்ட் போட்டிகளை ஜோ ரூட் எடுத்துக் கொள்வார் என்று பார்க்கப்படுகிறது.