Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா, அந்த பந்தை அப்படியே தனது பாக்கெட்டில் வைத்து ஓய்வறைக்கு எடுத்து சென்றுள்ளார். பிரசித் கிருஷ்ணாவின் இந்த செயல்பாடுகள் ரசிகர்களிடையே க்யூட் என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 மெய்டன் ஓவர்கள் உட்பட 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதிலும் டாப் 5 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இதனால் ஆட்டநாயகனாக பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்தை பிரசித் கிருஷ்ணா தனது பாக்கெட்டில் எடுத்து சென்றுள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமான வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பேசுகையில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அந்த பந்து இன்னும் எனது பாக்கெட்டில் தான் பத்திரமாக இருக்கிறது என்றார்.
தொடர்ச்சியாக ஃபுல்லர் லென்த் பந்துகளை வீசியது குறித்துப் பேசிய பிரசித் கிருஷ்ணா, இதற்கான உழைப்பு கடந்த சில காலமாகவே இருந்து வருகிறது. நான் எந்த வடிவ கிரிக்கெட்டில் விளையாடினாலும், பந்தின் லென்த்தை சரியாகப் போடுவதற்காக கடுமையான பயிற்சி எடுத்து வருகிறேன். முக்கியமாக, பயிற்சியாளர் மோர்னே மோர்கல் நீண்ட நாட்களாகவே என் காதில் இந்த அறிவுரைகளை கூறிக்கொண்டே இருந்தார்.
இன்று அதற்கான பலன் கிடைத்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி என்றார். தொடர்ந்து போட்டியின் போது தொடர்ச்சியாக 6வது ஓவரை வீச ஆசைப்பட்டீர்களா என்ற கேள்விக்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த அவர், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் மிகவும் சோர்வடைந்துவிட்டேன். சென்னையில் வெயில் மிகக் கொடூரமாக உள்ளது.
ஆனால், எனக்கு எந்தப் புகாரும் இல்லை. நான் வீசிய 5வது ஓவரிலேயே எனது 4வது விக்கெட்டைக் கைப்பற்றிவிட்டேன். இவ்வளவு கடுமையான வெயிலிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றதே முக்கியம் என்று தெரிவித்துள்ளார். சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களைத் திணறடித்து, தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச்சிறந்த பந்துவீச்சை பிரசித் கிருஷ்ணா பதிவு செய்துள்ளார்.
ஆட்டநாயகன் விருது வென்ற கையோடு, தான் வீழ்த்திய விக்கெட் பந்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அவர் கொடுத்த நேர்காணல் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரசித் கிருஷ்ணாவின் செயல்பாடுகளை க்யூட் என்று வர்ணித்து வருகின்றனர்.