International
oi-Vignesh Selvaraj
ஹனோய்: வியட்நாமில் நடந்த படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த விபத்திற்கு கடல் கொந்தளிப்பு மட்டுமல்லாது, படகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறும் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளர்.

இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் பலியாகி இருப்பதாகவும், கேரளாவை சேர்ந்த இருவர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளதாகவும் இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. 32 சுற்றுலாப் பயணிகள், சில பணியாளர்களை ஏற்றிச் சென்ற அந்த அதிவேகப் படகு, நேற்று கவிழ்ந்தது.
ஏஜி 26751 என்ற பதிவு எண் கொண்ட இந்த அதிவேகப் படகு, ‘மின் ஹுய் ஃபூ குவோக் டிரேடிங் அண்ட் டூரிசம் கம்பெனி லிமிடெட்’ நிறுவனத்திற்குச் சொந்தமானது. ஹோன் மே ரூட் தீவில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரம் சென்ற பிறகு, அதிவேகப் படகில் திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கடலில் விழுந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் பலத்த காற்றும், உயரமான அலைகளும் வீசுவது ஒரு வீடியோவில் பதிவாகியுள்ளது. மீட்புக் குழுவினர் நீரில் இருந்தவர்களை நோக்கி உயிர் காக்கும் மிதவைகளை வீசுவதும், ஜெட் ஸ்கிகள் மூலம் மீட்கப்பட்டவர்களைக் கரைக்குக் கொண்டு செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த மீட்புப் பணிக்காக எல்லைப் பாதுகாப்புப் படை இரண்டு படகுகளையும் 35 பணியாளர்களையும் ஈடுபடுத்தியது. இந்த நடவடிக்கையில் கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் பிற குழுவினருடன் இணைந்து செயல்பட்டன.
விபத்தைத் தொடர்ந்து ஹோசிமின் பகுதியில் இந்திய துணை தூதரகத்தால் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து தகவல் அல்லது விவரம் வேண்டுவோர் +84362817930, +84915523714, +84334520414 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தங்கள் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களும் விபத்தில் உயிரிழந்த நிலையில், லாவா நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதே தங்களின் உடனடி முன்னுரிமை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வியட்நாமில் படகு விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பழனியைச் சேர்ந்த நிர்மல் குமார் பேசுகையில், மூடிய படகில் 39 பேர் பயணித்துக் கொண்டிருந்தோம். திடீரென வீசிய ஓர் அலையால் படகு மூன்றே நிமிடங்களுக்குள் கவிழ்ந்துவிட்டது. படகின் முன்புறத்தில் இருந்தவர்கள், முன்புற வழியாகவும், ஜன்னல்கள் வழியாகவும் வெளியே வந்துவிட்டோம் படகின் பின்புறத்தில் இருந்த 15 பேரும் மாட்டிக் கொண்டனர் எனக் கூறியுள்ளார்.
அதிவேகப் படகு சுமார் 400 மீட்டர் தொலைவில் சென்றபோது கடல் மிகவும் கொந்தளிப்போடு காணப்பட்டது, பெரிய பெரிய அலைகள் ஏற்பட்ட நிலையில் படகு நொடிப்பொழுதில் கவிழ்ந்துள்ளது. இதில் இருந்த பலரும் லைஃப் ஜாக்கெட் அணியவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பலி எண்ணிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
மறுபுறம், அதிவேக படகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் இந்த விபத்துக்கு காரணம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுதொடர்பான விசாரணை தொடங்கப்பட உள்ளது. விசாரணையில், படகு விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்ற விவரங்கள் தெரியவரும்.

