
தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கோவை புறநகர் மத்திய மாவட்டச் செயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அப்பதவிக்கு செ.ம.வேலுசாமி நியமிக்கப்பட்டார். எஸ்.பி. வேலுமணி அ.தி.மு.க-வில் கோலோச்சிய வரை செ.ம.வேலுசாமிக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் கொடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தொண்டாமுத்தூரை உள்ளடக்கிய மத்திய மாவட்டச் செயலாளர் பதவி செ.ம.வேலுசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.பி.வேலுமணிக்கு மாநில அளவிலான பதவி வழங்கப்பட்டாலும், அது அதிகாரமில்லாத பதவி எனவும், இதனால் அவருக்கான அதிகாரங்கள் குறைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எஸ்.பி. வேலுமணியின் பழைய பதவியான புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை இரண்டாக பிரித்து, அவருக்கு எதிராக அரசியல் செய்து வரும் செ.ம.வேலுசாமி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வழங்கப்பட்டு இருப்பதும், அதிலும் அவரது சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் பொறுப்பாளராக செ.ம.வேலுசாமி நியமிக்கப்பட்டு இருப்பதும் எஸ்.பி.வேலுமணி தரப்பினரை அதிருப்தி அடைய செய்துள்ளது.