தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கலந்தாய்வில் நிரப்பப்படாமல் காலியாக இருந்தன.
இடங்களை வீணடிக்காமல் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (All India Quota) வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது.
தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் 151 உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்க உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசும் அந்த இடங்களை வழங்க உள்ளது.

இதற்கு தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்றும், நீதிமன்றத்தில் உரிய வாதங்களை முன்வைக்கத் தவறியதால் தமிழக அரசு இந்த இடங்களை இழந்துவிட்டதாகவும் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்.
தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?
மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?