21 பேர் பலி: டெல்லி ஹோட்டலில் தீப்பற்றியதும் மின்சாரத்தை துண்டித்துவிட்டு தப்பிய சமையல்காரர் கைது | Delhi hotel fire: Cook arrested for causing deaths of 21 people due to a minor error

Spread the love

டெல்லியில் உள்ள மால்வியா நகரில் இருக்கும் ப்ளோரிஷ் இன் ஹோட்டலில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டு ஒன்பது இந்தியர்கள், 12 வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் விசாரணை நடத்தி வந்தனர். தீ விபத்தில் குருகிராமைச் சேர்ந்த அகர்வால் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.

இத்தீவிபத்து தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு நடத்திய விசாரணையில் ஹோட்டல் சமையல்காரர் கேசவ் நேகியின் அலட்சியத்தால்தான் ஹோட்டலில் தீ பரவியதாகவும், 21 பேர் உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் நேகியுடன் மேலும் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டபோது, ​​கேசவ் நேகி தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து வெளியேறினார்.

சமையலறையில் இருந்த மின்சார அடுப்பை பற்ற வைத்தவுடன் அது வெடித்துச் சிதறிப் பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியதாக அந்தச் சமையல்காரர் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

தீ விபத்து

தீ விபத்து

தீப்பிடித்தவுடன், ஹோட்டலின் முதன்மை மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, அடர்ந்த புகைக்கு இடையே தான் வெளியே ஓடியதாகவும் அவர் கூறினார்.

மூடிய கதவு, வெளியில் வரமுடியாத வாடிக்கையாளர்கள்

அடுப்பு வெடித்ததைத் தொடர்ந்து நேகி மின்சாரத்தை அணைத்ததால் ஹோட்டலின் எலக்ட்ரானிக் கதவுகள் பூட்டப்பட்டது. அவை எதுவும் செயல்படவில்லை. இதன் காரணமாக பலர் அறைக்குள்ளேயே சிக்கிக்கொண்டது போலீஸ் விசாரணையில் இப்போது தெரியவந்துள்ளது.

ஹோட்டல் குளியலறையில் கதவைத் திறக்க முடியாததால் கணவன்-மனைவி இருவரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

நேகியின் அலட்சியச் செயலால் ஹோட்டலில் பலர் கதவைத் திறக்க முடியாமல் வெளியே வரமுடியவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் புகையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்திருந்தனர்.

மேலும், காவல்துறையினர் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் அந்த இடத்துடன் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன்கிழமை காலை 8:30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. ஐந்து மாடிகள் கொண்ட ஹோட்டலில் 22 அறைகள், ஒரே ஒரு நுழைவு-வெளியேறும் இடம், நிரந்தரமாக சீல் செய்யப்பட்ட திறக்க முடியாத ஜன்னல்கள் மற்றும் சென்சார் மூலம் இயக்கப்படும் பிரதான கதவு ஆகியவற்றைக் கொண்டதாக இருந்தது.

இவையும் 21 பேர் உயிரிழப்பு மற்றும் தீவேகமாகப் பரவ முக்கிய காரணம் ஆகும். 2022ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தாக இது கருதப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *