International
oi-Halley Karthik
நூக்: கிரீன்லாந்தில் அமெரிக்க படைகளை நிறுத்தவும், அங்கு ரஷ்யாவின் ஆதிக்கத்தை தடுக்கவும் அந்நாட்டுடன் நாங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இது ரஷ்யாவின் கோபத்தை சீண்டியிருக்கிறது.
ஏனெனில் ஆர்டிக் பகுதியில் ரஷ்யாதான் ராஜா. அப்படி இருக்கையில், திடீரென அமெரிக்கா உள்ளே வருவதை புதின் கொஞ்சம் கூட ரசிக்கவில்லை.

பஞ்சாயத்து இதுதான்
இன்று காலை டிரம்ப் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது, “டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகியவற்றுடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இந்த ஒப்பந்தம் கிரீன்லாந்தின் பாதுகாப்பு மீது அமெரிக்காவிற்கு நிரந்தரக் கட்டுப்பாட்டை வழங்குகிறது. இதன் மூலம் அமெரிக்காவின் அனைத்துக் கவலைகளுக்கும் முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவிற்கு எந்தச் செலவும் ஏற்படாது!
கிரீன்லாந்தில் எதையும் செய்ய முடியாது
கிரீன்லாந்து மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை கிரீன்லாந்தில் மேற்கொள்ளும் முழு அதிகாரமும் அமெரிக்காவிற்கு என்றென்றும் இருப்பதை உறுதிசெய்ய, எனது வழிகாட்டுதலின் பேரில் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதிநிதிகளுடன் நாங்கள் பணியாற்றினோம். மேலும், இனிவரும் காலங்களில், அமெரிக்காவின் வெளிப்படையான எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, அமெரிக்காவின் எதிரி நாடுகள் எவையும் கிரீன்லாந்தில் தளத்தையோ, ராணுவ இருப்பையோ கொண்டிருக்கவோ அல்லது முக்கியமான முதலீடுகளைச் செய்யவோ முடியாது.
முடிவிலா கால ஒப்பந்தம்
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்க அதிபர்கள் கிரீன்லாந்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர். ஆனால் அவர்களில் எவராலும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. மிக முக்கியமான இந்த விவகாரத்திற்கு நிரந்தரமான மற்றும் உறுதியான தீர்வை வழங்கிய அதிபராக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இது ஒரு “முடிவிலா கால” ஒப்பந்தம்; இதற்கு காலாவதி தேதி இல்லை! இப்போது நிகழ்ந்துள்ள இந்த விஷயத்தைக் குறித்து நாங்கள் பெருமையும் கௌரவமும் கொள்கிறோம்.
கிரீன்லாந்து எங்களுக்குதான்
இன்று ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்தையும் அமெரிக்க மக்கள் பெரிதும் மதிப்பார்கள். கிரீன்லாந்தின் பொருத்தமான பகுதிகளில் பெரிய அளவிலான ராணுவ இருப்பை உருவாக்கும் பணிகளை நாங்கள் உடனடியாகத் தொடங்குவோம். இப்பகுதியின் மேம்பாடு மற்றும் கட்டுமானப் பணிகளில் கிரீன்லாந்து மக்களுடன் இணைந்து பணியாற்றுவோம்” என்று கூறியிருக்கிறார்.
ரஷ்யா அலர்ட்
அதாவது கிரீன்லாந்து முழுமையாக அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்திற்குள் வருகிறது என்பதுதான் இதன் அர்த்தம். பிரச்சனை என்னவெனில், ஆர்டிக் பகுதியில் ரஷ்யாதான் கிங். அப்படி இருக்கையில் தற்போது தேவையில்லாமல் அமெரிக்கா உள்ளே நுழைந்திருப்பதால்.. ரஷ்யா அலர்ட் மோடுக்கு போயிருக்கிறது. சோவியத் கால ராணுவ முகாம்கள், விமான தளங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது.
3ம் உலகப்போர்
ஆர்டிக் பகுதி என்பது.. எண்ணெய் வளம் அதிகம் கொண்ட பகுதியாகும். இந்த பகுதியை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக முயன்று வருகிறது. இப்போது போட்டிக்கு அமெரிக்காவும் வந்திருப்பதால், இந்த பகுதியில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த இடத்தில் ஒரு சிறிய தவறு நடந்தால் கூட.. அது 3வது உலக போருக்கான காரணமாக அமைந்துவிடும். எனவே மொத்த உலகமும் தற்போது உச்சக்கட்ட பதற்றத்தில் இருக்கிறது.