ChatGPT, ஏ.ஐ மூலம் தேர்வில் காப்பிடியத்த மும்பை ஐ.ஐ.டி மாணவர்: பிடிபட்டதால் விபரீத முடிவு!

Spread the love

மும்பை ஐ.ஐ.டியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் சாஹில் வகோடே. எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த சாஹில் வகோடே தேர்வின்போது விடைகளைக் கண்டரிய காப்பியடித்துள்ளார். அவர் இதற்காக தனது மொபைல் போன் மூலம் வினாக்களை ChatGPT-இல் பதிவேற்றியுள்ளார். அதோடு செயற்கை நுண்ணறிவையும் இதற்காக பயன்படுத்தியுள்ளார். அதனை தேர்வு மையத்தில் இருந்த ஆசிரியர் கண்டுபிடித்துவிட்டார். அப்படி இருந்தும் அந்த மாணவர் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

அதோடு அவரது ஆசிரியரும், துறைத் தலைவரும் அந்த மாணவரிடம் இது குறித்துப் பேசி அவருக்கு ஆலோசனை வழங்கியதுடன், இச்சம்பவம் அவரது கல்வியை பாதிக்காது என்றும் உறுதியளித்தனர். இந்த கவுன்சிலிங் சம்பவத்திற்கு பிறகு மாணவர் அவரது விடுதி அறைக்கு சென்றார். ஆனால் மாலையில் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

இது குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள ஐ.ஐ.டி நிர்வாகம், இந்த சோகமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நண்பர்கள், வகுப்பு தோழர்கள், ஆசிரியர் உறுப்பினர்கள் மற்றும் பிறருக்கு ஐ.ஐ.டி உறுதுணையாக இருக்கும் என்றும், மரணத்திற்கான சூழ்நிலைகள் குறித்து உரிய அதிகாரிகளால் விசாரிக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாகோடேவின் இறப்பு குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இச்சம்பவம் தொடர்பான முழுமையான உண்மையை ஐ.ஐ.டி வெளியிடவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சாட்டினர். முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர், ஓராண்டு கால இடைநீக்க நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார் என்று மிரட்டப்பட்டதாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.

அவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டால், அந்த மாணவர் விடுதியை விட்டு வெளியேறி வளாகத்திற்கு வெளியே வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் அவர்கள் கூறினர். ஒழுங்கு நடவடிக்கை குறித்த அச்சம் மற்றும் மனஅழுத்தம் ஆகியவை வகோடே இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சாட்டினர். கடந்த 6 மாதத்தில் மும்பை ஐ.ஐ.டி வளாகத்தில் தற்கொலை செய்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *