முப்பது சவரன் நகையைப் பறிகொடுத்து 12 ஆண்டுகளாகியும் மீட்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறார், சென்னையில் வசிக்கும் முதுகுளத்தூரைச் சேர்ந்த இளையராஜா.
‘ஜெயலலிதா முதலமைச்சரா இருந்த 2014ம் வருஷம் நகை தொலைஞ்சது. அவங்க மறைன்சு பிறகு எடப்பாடி பழனிசாமி வந்து, அவருக்குப் பின்னாடி மு.க.ஸ்டாலின் அஞ்சு வருஷம் ஆட்சி செஞ்சார். இவங்க எல்லார் ஆட்சியிலயும் முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்ட பல இடங்களுக்கு மனு கொடுத்து கொடுத்து அலுத்துப் போயிடுச்சு. வீட்டுல எல்லாரும் நம்பிக்கை இழந்துட்டாங்க. ஆனாலும் கடைசி முயற்சியா இப்ப அமைஞ்சிருக்கிற புது அரசின் முதல்வர்கிட்டயும் மனு கொடுத்துப் பார்க்கலாம்னு கொடுத்திருக்கேன்’ என்ற இளையராஜாவிடம், நடந்தது குறித்து விரிவாகவே கேட்டோம்.

”என் தங்கச்சி புனிதவதிக்கு சென்னையில திருமண நிச்சயதார்த்தம் வச்சிருந்தோம். அவங்களும் என் அம்மாவும் இருந்தது பெரம்பலூரில். அங்க இருந்து அரசு பஸ்ல கிளம்பி சென்னை வந்தாங்க. அவங்க கிட்ட கல்யாணத்துக்காக வாங்கியிருந்த முப்பது சவரன் நகை இருந்தது. விடிகாலையில் பஸ் கூடுவாஞ்சேரி வந்த போதுதான் நகை இருந்த கைப்பை மாயமாகி இருந்ததை அம்மாவும் தங்கையும் கவனச்சிருக்காங்க.
உடனே அந்த இடத்துலயே அதாவது கூடுவாஞ்சேரி போலீஸ் ஸ்டேஷன்லயே புகாரும் கொடுத்துட்டோம்.
அவ்வளவும் கல்யாணத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வாங்கினது.
திடீர்னு காணாமப் போன சூழல்ல ரொம்ப ரொம்ப சிரமப்பட்டு கடன்பட்டு ஒருவழியா அந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சோம்.
கல்யாணத்தை முடிச்ச கையோட போலீஸ் ஸ்டேஷனுக்கு நடக்கத் தொடங்கினேன். கொஞ்ச நாள் அலைஞ்சதுக்குப் பிறகு எஃப்.ஐ.ஆர் போட்டாங்க. அந்த ஒரு வேலைதான் நடந்தது. அதுக்குப் பிறகு பன்னிரண்டு வருஷம் ஆகியும் ஒரு துப்பு துரும்புகூட கிடைக்கலைங்கிறாங்க. நானும் சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் தாண்டி டி.எஸ்.பி ஆபீஸ், எஸ்.பி ஆபீஸ்னு உயரதிகாரிகள் அலுவலகங்களுக்கும் மனு போட்டுப் பார்த்தேன். அப்பவும் புகார் அங்க அனுப்பப்பட்டிருக்கு, இங்க அனுப்பப்பட்டிருக்குனு பதில் வருமே தவிர என் நகை எனக்கு கிடைச்சபாடில்லை.

இதுக்கிடையில் ஆட்சிகள் மாறி அதிகாரிகளும் மாறிட்டாங்க. ஒருகட்டத்துல முதலமைச்சரின் தனிப்பிரிவுலயும் புகார் கொடுத்தேன். நான் இப்ப குடியிருக்கிற ஏரியா ஸ்டேஷன்ல இருந்து கூப்பிட்டு விட்டாங்க. ‘இந்த புகார் தொடர்பா சம்பவம் நடந்த கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தையே தொடர்பு கொள்ளச் சம்மதிக்கிறேன்’னு எழுதி வாங்கிட்டு அனுப்பிட்டாங்க.
மனம் ரொம்பவே வெறுத்துப் போச்சு. இப்ப தங்கம் விற்கிற விலையில் முப்பது பவுன் நகைன்னா சும்மாவாங்க?
சம்பவம் நடந்து வருஷக் கணக்குல ஆகிட்டதால புகாரின் இன்றைய நிலை என்னன்னே எங்களுக்குத் தெரியலை. அதனால தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் புகாரின் நிலை குறித்துக் கேட்டேன். அப்பக்கூட ‘என் எல்லையில வரல, உன் எல்லையில வரல’னுதான் மனுவை ஃபார்வர்டு பண்ணிட்டேதான் இருக்காங்க.
என் நகை பறிபோன விஷயத்துல குற்றவாளிகளை கண்டு பிடிச்சாங்களா இல்ல கண்டுபிடிக்க முடியலைனு புகாரை முடிச்சுட்டாங்களா எதுவுமே தெரியாத நிலைதான் இப்ப. சமீபத்துல நீதிமன்ற தீர்ப்பு ஒண்ணு வந்தது. இந்த மாதிரி நகை இழந்த வழக்குகளில் போலீசாரால் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியலைன்னா பாதிக்கப்பட்டவங்களுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்கணும்னு சொல்லுது அந்த தீர்ப்பு.
ஒருவேளை நகைகள் கிடைக்காதுனு தெரிஞ்சா அந்த மாதிரி இழப்பீடாவது கிடைச்சா எங்களுக்கு பெரிய உதவியா இருக்கும்.
ரொம்ப நம்பிக்கை இழந்த நிலையில்தான் இப்ப தமிழ்நாட்டுல நடந்த ஆட்சி மாற்றமாவது இந்த விஷயத்துல எங்களூக்குச் சாதகமான வழி பிறக்க உதவாதானுதான் முதல்வர் தனிப்பிரிவில் புகார் தந்துட்டு காத்திட்டிருக்கோம்” என்கிறார் இளையராஜா.