"30 நாள்களுக்கு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் IPO-க்களை வாங்கக்கூடாது; ஏன்?" – சமீர் அரோரா யோசனை

Spread the love

இந்தியாவில் தொடர்ந்து IPO-கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மக்களும் IPO-க்களை வாங்க மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

IPO-க்கள் குறித்து CNBC-TV18 செய்தி நிறுவனத்திற்கு சமீர் அரோரா பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த Helios Capital என்கிற முதலீட்டு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

CNBC-TV18 பேட்டியில் சமீர் அரோரா பேசியுள்ளதாவது, “இனி இந்தியப் பங்குச்சந்தை எதிர்கொள்ளும் முக்கிய சவால் அந்நிய முதலீட்டாளர்களின் விற்பனை மட்டுமல்ல.

சமீர் அரோரா
சமீர் அரோரா

IPOக்கள், தொகுப்புப் பங்குகள் விற்பனை (Block Deals) மற்றும் தகுதிவாய்ந்த நிறுவனங்களின் பங்கு ஒதுக்கீடு (QIP) ஆகியவையும்தான்.

தற்போது சந்தைக்குள் நுழையும் நிறுவனங்களின் தரம் சற்று குறைந்துள்ளது. சந்தை சாதகமாக இருப்பதால், சில இடைத்தரகர்கள் தரம் குறைந்த பங்குகளைச் சந்தைக்குள் கொண்டுவருகின்றனர்.

பலவீனமான தொழிலைக் கொண்ட நிறுவனங்கள் கூடச் சந்தையின் போக்கைப் பயன்படுத்திப் பட்டியலிட முயல்கின்றன.

ஆனால், இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், நிறுவனம் பலவீனமாக இருந்தாலும், தற்போதைய சந்தை உற்சாகத்தின் காரணமாகத் தரம் குறைந்த பங்குகள் முழுமையாக விற்றுத் தீர்கின்றன.

இதனால், இரண்டாம் நிலைச் சந்தையின் நிலைத்தன்மையைப் பாதுகாக்க, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.

AMFI போன்ற ஒரு தொழில் துறை அமைப்பின் கீழ், அனைத்து IPO, QIP மற்றும் தொகுப்புப் பங்கு ஒதுக்கீடுகளை வாங்குவதை தற்காலிகமாக 30 நாள்கள் நிறுத்தி வைக்கலாம்.

இந்த நேரத்தில், நிறுவன முதலீட்டாளர்கள் புதிய பங்குகளை வாங்காமல், இரண்டாம் நிலைச் சந்தையின் செயல்பாட்டை மதிப்பிடுவார்கள். இதன் பிறகு, புதிய பங்குகள் வாங்குவது குறித்து முடிவு செய்வார்கள்.

இதன் மூலம், சந்தையின் உண்மையான நிலவரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

சரியான விலையைக் கொண்டதாக சந்தையை மாற்ற, தரம் குறைந்த சில பங்குகள் தோல்வியடைவது அவசியமான ஒன்றாகும்” என்று கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *