பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோரை உதறித்தள்ளி வீட்டைவிட்டுத் துரத்தும் இந்தக் காலத்தில் முகமறியாத தொழுநோயாளிகள், ஆதரவற்றோரை அன்புடன் அரவணைப்பவர்கள் சிலர் இருப்பதால்தான் என்னவோ இன்னும் மனிதநேயம் மரித்துப் போகாமல் இருக்கிறது.
அதுபோன்ற மனிதநேயமிக்க சமூகப் பணியாளர்தான் திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பா.மணிமாறன் (வயது 40).
கடந்த 25 ஆண்டுகளாக, தொழுநோயால் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கானோரை மீட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறார் மணிமாறன்.
ஆதரவற்ற நிலையில் இறந்து கிடக்கும் முதியவர்களின் உடல்களையும் மீட்டு நல்லடக்கம் செய்கிறார்.

திருவண்ணாமலை மட்டுமில்லாமல், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி எனப் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து அரசு மருத்துவமனைகளில் உறவினர்களால் உரிமைக் கோரப்படாத பிணங்களையும் கேட்டு பெற்று காவல்துறையினரின் அனுமதியுடன் முறைப்படி அடக்கம் செய்கிறார். இப்போது வரை சுமார் 3,508 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்திருக்கிறார் மணிமாறன்.
இவரின் இத்தனை ஆண்டுகளாகச் சேவையைப் பாராட்டி சென்னையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், முதலமைச்சர் விஜய் சிறந்த சமூகப் பணியாளருக்கான விருதை மணிமாறனுக்கு வழங்கினார். மேலும், 10 கிராம் எடையிலான தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழையும் வழங்கி பாராட்டினார் முதலமைச்சர் விஜய்.