Sports
oi-Yogeshwaran Moorthi
நியூஜெர்சி: 36 ஆண்டுகளுக்கு முன் மரடோனா தவறவிட்ட வாய்ப்பை, இம்முறை மெஸ்ஸி சாதித்து காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அர்ஜென்டினா அணி வீரர்கள் தீவிரமாக அட்டாக்கில் ஈடுபடுவார்கள் என்று பார்க்கப்படுகிறது.
ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஸ்பெயின் அணி களமிறங்க உள்ளது. உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டிக்கு இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸி மற்றும் ஸ்பெயின் அணியின் லமின் யமால் இடையிலான மோதலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால், தொடர்ச்சியாக 2 உலகக்கோப்பையை வென்ற 3வது அணி என்ற மிகப்பெரிய சாதனையை படைக்க முடியும். 64 ஆண்டுகளாக இந்த சாதனையை எந்த அணியாலும் படைக்க முடியவில்லை. இதற்கு முன்பாக இத்தாலி அணி 1934 மற்றும் 1938 ஆகிய உலகக்கோப்பையை வென்றுள்ளது.
அதன்பின் பிரேசில் அணி 1958 மற்றும் 1962 ஆகிய உலகக்கோப்பை வென்று சாதித்தது. இந்த சாதனையை முறியடிக்க அர்ஜென் டினா அணிக்கு வாய்ப்பு கிடைத்தது. 1986ல் மரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றது. இதன்பின் 1990ல் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் அந்தப் போட்டியில் ஜெர்மனி அணியிடம் தோல்வி அடைந்தது.
அன்று மரடோனாவால் சாதிக்க முடியாததை இன்று மெஸ்ஸி சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் ஸ்பெயின் அணி தொடர்ந்து 37 சர்வதேச போட்டிகளாக தோல்வியையே சந்திக்கவில்லை. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி வென்றால், இத்தாலியின் 37 போட்டிகள் என்ற சாதனையை முறியடிக்க முடியும். இல்லையென்றால், ஸ்பெயினை வீழ்த்திய பெருமையை அர்ஜென்டினா அணி பெறும். அர்ஜென்டினா அணியின் 36 ஆண்டு கால ஏக்கத்தை மெஸ்ஸி நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
