40% எகிறிய சர்க்கரை விலை.. E20 எத்தனாலுக்கு கரும்பு மொத்தமாக திருப்பிவிடப்பட்டது காரணம்? உண்மை என்ன | Sugar Price Rise in India: Is Ethanol Production the Real Reason Behind the 40% Surge in a week?

Spread the love

Business

oi-Vigneshkumar

டெல்லி: இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே சர்க்கரை விலை மிக பெரியளவில் உயர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படும் நிலையில், எத்தனால் தயாரிப்பிற்கு சர்க்கரை திருப்பிவிடப்பட்டதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. உண்மையில் சர்க்கரை விலை ஏற என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவா பார்க்கலாம்.

இந்தியாவில் பல ஆண்டுகளாக சர்க்கரை உபரியாக உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. சர்க்கரை உபரியாக இருந்ததால் கரும்பு வியாபாரிகளுக்கும் உரிய விலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதை சமாளிக்கும் தீர்வுகளில் ஒன்றாக எத்தனால் முன்வைக்கப்பட்டு வந்தது.

Sugar Price Rise in India Sugar Price India

உபரி சர்க்கரை

அதிகப்படியான கரும்பை எத்தனால் பயன்பாட்டிற்கு திரும்பிவிடலாம் என்றும் இதன் மூலம் சர்க்கரை ஆலைகளின் நிதிநிலையை மேம்படுத்துவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் முடியும் என்ற நோக்கில் எத்தனால் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரே மாதத்தில் சர்க்கரை விலை 40% வரை உயர்ந்துள்ள நிலையில், கரும்பை எத்தனால் தயாரிப்புக்கு திருப்பிவிட்டதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களான ரமேஷ் சந்த் மற்றும் அசோக் குலாட்டி இடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது, கையிருப்பு நிலை மோசமாக இருப்பதை இருவரும் ஒப்புக்கொண்டாலும், எத்தனால் உற்பத்திக்காக கரும்பு திருப்பிவிடப்பட்டதன் தாக்கம் குறித்து இருவரும் வெவ்வேறு கருத்துகளை கூறுகிறார்கள்..

கரும்பு உற்பத்தி பாதிப்பு

சர்க்கரை விலை உயர எத்தனால் உற்பத்திக்கு கரும்புகளை அனுப்பியது காரணமில்லை என்கிறார் முன்னாள் நிதி ஆயோக் உறுப்பினரான ரமேஷ் சந்த். 2025-26 சர்க்கரை பருவத்திற்கான உற்பத்தி 34.3 மில்லியன் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது சுமார் 30.6 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது.. அதிகப்படியான மழை, நீர்த்தேக்கம், கரும்புகளை தாக்கும் நோய்கள் ஆகியவை கரும்பு விளைச்சலை பாதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அசோக் குலாட்டி வேறு விதமான கருத்தை கூறுகிறார். சர்க்கரை உற்பத்தி குறைந்தது முக்கிய காரணம் என்றாலும் கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டதும் விலை உயர்வை மேலும் அதிகரித்ததாக அசோக் கூறுகிறார். உற்பத்தி சுமார் 10% குறைந்த நிலையில், சர்க்கரை கையிருப்பு சுமார் 80 லட்சம் டன்னிலிருந்து 50 லட்சம் டன்னாக குறைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் எத்தனாலுக்கு அதிகப்படியான கரும்புகள் திருப்பிவிடப்பட்டது நிலைமையை மோசமாக்கியதாக அவர் குறிப்பிடுகிறார்.

எத்தனால்

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி தேவையை விட அதிகமாக இருந்த காலங்களில், அந்த உபரியை சமாளிக்க எத்தனால் ஒரு வழியாக அமைந்தது. 2018-19 முதல் பி-ஹெவி மொலாசஸ், கரும்பு சாறு மற்றும் சிரப்பை எத்தனால் தயாரிக்க பயன்படுத்த ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. உபரி சர்க்கரை காலங்களில் அந்த கரும்பை எத்தனால் தயாரிப்புக்கு திருப்புவதன் மூலம் சர்க்கரை அதிகமாக குவிவதை தடுக்க முடிந்தது. அதே நேரத்தில் ஆலைகளின் வருவாயும் அதிகரித்தது.

2022-23ல் 43 லட்சம் டன் சர்க்கரை எத்தனால் தயாரிப்புக்கு திருப்பிவிடப்பட்டது. இது 2023-24ல் இது 24 லட்சம் டன்னாகவும், 2024-25ல் 34 லட்சம் டன்னாகவும் இருந்தது. அதேநேரம் 2025-26ல் எத்தனால் தயாரிப்புக்காக திருப்பப்படும் சர்க்கரையின் பங்கு சுமார் 9% ஆக குறைந்துள்ளதாகவும் ரமேஷ் சந்த் தெரிவித்துள்ளார். ரமேஷ் சந்த் மேலும் கூறுகையில், “எத்தனால் தயாரிப்புக்காக கரும்பு திருப்பப்படுவது சர்க்கரை விலையை பாதிக்கும் என்பது உண்மை. ஆனால் தற்போதைய விலை உயர்வுக்கு அதையே முக்கிய காரணமாக கூற முடியாது. உற்பத்தி குறைவு, வானிலை மற்றும் நோய்கள், பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவை என பல காரணங்கள் உள்ளன” என்றார்.

மோசமாக்கியது

இருப்பினும் அசோக் குலாட்டி, “இந்த இக்கட்டான சூழலில் எத்தனால் உற்பத்திக்கு கரும்பை மேலும் மேலும் அதிகமாக திருப்பிவிடப்படதே நிலைமையை மோசமாக்கியது.. சர்க்கரை உற்பத்தி குறைந்த நிலையில், ஏற்கனவே இருந்த கையிருப்பும் குறைந்திருந்ததால் சர்க்கரை விலை ஏற ஆரம்பித்துவிட்டது. மேலும், சர்க்கரை பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் பல மாதங்களுக்கு முன்பே தெரிந்திருந்தும், அரசு சர்க்கரை இறக்குமதியை முன்கூட்டியே அனுமதிக்கவில்லை. உள்நாட்டு கரும்பை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்துவதற்குப் பதிலாக நேரடியாக எத்தனாலை இறக்குமதி செய்திருக்கலாம்” என்றார்.

அதாவது இரு வேளாண் வல்லுநர்களுமே கரும்பு உற்பத்தி குறைந்தது, நோய்கள் தாக்கியை முக்கிய காரணமாக குறிப்பிடுகிறார்கள். ஆனால், எத்தனால் தயாரிப்புக்கு கரும்பை திருப்பிவிட்டது நிலைமையை மோசமாக்கியதா என்பதிலேயே இருவேறு கருத்துகளை கூறுகிறார்கள். எத்தனால் குறித்து ஏற்கனவே சர்ச்சை நிலவி வந்த நிலையில், சர்க்கரை விலையேற்றம் நிலைமை மேலும் இக்கட்டானதாக மாற்றியுள்ளது என்பதே உண்மை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *