கேரள மாநிலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்துவருகின்றனர். இந்த நிலையில் கேரள மின்வாரிய ஊழியர்களுடன் கேரள முதல்வர் வி.டி.சதீசன் உற்சாகமாக நடனமாடுவது போன்ற ஏ.ஐ வீடியோ அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. “ஏ.ஐ காவலா’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ மூன்று நாள்களில் பல்வேறு சமூக வலைதளங்கள் வழியாக 7 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து வைரலானது. திருச்சூரைச் சேர்ந்த அபிஜித் என்பவர் அந்த வீடியோவை கிரியேட் செய்து பகிர்ந்திருந்தார். அதை, `ஏ.ஐ வீடியோ’ என்ற குறிப்புடன்தான் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த முதல்வர் வி.டி.சதீசன், “நன்றாக நடனமாடக்கூடிய மோகன்லாலை விடவும், எனது நண்பரும் நடிகருமான விஜய்யை விடவும் நான் மிகச் சிறப்பாக நடனமாடுவதுபோல இந்த வீடியோவில் காட்டியுள்ளனர். இதைப் பார்த்துவிட்டு நானே ஆச்சர்யப்பட்டுப் போய்விட்டேன்” எனக் கூறியிருந்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் இந்த வீடியோவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போலீஸில் புகார் அளித்தனர். ஒரு தனிநபரின் முன் அனுமதியின்றி, அவரது உருவத்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் தவறாகப் பயன்படுத்தி வீடியோ உருவாக்குவது சைபர் சட்டப்படி குற்றம் எனக் காவல்துறையின் சைபர் பிரிவு சுட்டிக்காட்டியது. இதற்கிடையே மெட்டா நிறுவனம் திடீரென அந்த வீடியோவை இந்திய பயனர்கள் யாரும் பார்க்க முடியாதவாறு முடக்கியது.