International
oi-Shyamsundar I
மாஸ்கோ: உலக அளவில் பெரிய ஆயுத நிறுவனங்களோ, அணு ஆய்வு நிறுவனங்களோ அல்லது கச்சா எண்ணெய் நிறுவனங்களோ தான் மக்களுக்கு அதிக ஆபத்தானவை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உலகிலேயே மிக அதிகமான மனித உயிர்களைப் பறித்த நிறுவனம் ஒரு சீன அரசு நிறுவனம் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பர்ன் என்ற பிரபல யூடியூப் தளமும், தி எக்ஸாமினேஷன் என்ற புலனாய்வுப் பத்திரிகையாளர் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில், சீனா நேஷனல் டுபாகோ கார்ப்பரேஷன் என்ற அரசு நிறுவனம் தான் உலகின் மிக ஆபத்தான நிறுவனம் என்பது தெரியவந்துள்ளது.

பலருக்கும் தெரியாத பிரம்மாண்ட சாம்ராஜ்யம்
மேற்கத்திய நாடுகளில் பிலிப் மோரிஸ் போன்ற மிகப்பெரிய சிகரெட் நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் ஐடிசி போன்ற நிறுவனங்கள் உள்ளன. ஆனால், சீனாவில் தனியார் புகையிலை பிஸ்னஸ் செய்ய முடியாது. அங்கே புகையிலை என்பது அரசு பிஸ்னஸ் ஆகும்.
அதாவது புகையிலை பிஸ்னஸ் அரசுடமை ஆக்கப்பட்டுவிட்டது. அங்கே சீன அரசால் நடத்தப்படும் சீனா டுபாகோ நிறுவனம், உலகின் மற்ற அனைத்து முன்னணி சிகரெட் நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கும் அளவை விட அதிகமான சிகரெட்டுகளை தயாரிக்கும் ஒற்றை நிறுவனமாகத் திகழ்கிறது.
சீனாவில் விற்கப்படும் சிகரெட்டுகளில் 97% பங்குகளை இந்த ஒரு நிறுவனமே தயாரிக்கிறது. சீனாவுக்கு வெளியே இதன் பெயர் பலருக்குத் தெரியாது. ஏனெனில், இவர்கள் தயாரிக்கும் பெரும்பாலான சிகரெட்டுகள் சீன நாட்டிற்குள்ளேயே விற்பனை செய்யப்படுகின்றன. சீனாவில் சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.
5.7 கோடி உயிர்களைப் பறித்த கொடூரம்
1990-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான மருத்துவத் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர். அதில், சீனா டுபாகோ நிறுவனத்தின் சிகரெட்டுகளைப் பயன்படுத்தியதால் மட்டுமே இதுவரை சுமார் 5 கோடியே 73 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
உலகளவில் போர்கள், தீவிரவாதம், குண்டுவெடிப்பு, நிலநடுக்கம், வெள்ளம், துப்பாக்கிச் சூடு, அல்லது பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்களால் ஏற்படும் காற்றாசு மாசுபாட்டைக் காட்டிலும், இந்த ஒரு சிகரெட் நிறுவனம் ஏற்படுத்திய உயிரிழப்புகள் மிக அதிகம். சராசரியாக, தினமும் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் உயிரிழக்கின்றனர்.
வேலியே பயிரை மேயும் விசித்திரம்
சீனாவில் புகையிலையைக் கட்டுப்படுத்தும் சுகாதாரத்துறை அதிகாரிகளும், இந்த சிகரெட் கம்பெனியை நடத்தும் அதிகாரிகளும் வேறு வேறு நபர்கள் அல்ல. ஒரே அரசு அமைப்பின் கீழ் தான் இரண்டும் இயங்குகின்றன. அதாவது தமிழ்நாட்டில் எப்படி மதுக்கட்டுப்பாடு துறைதான் டாஸ்மாக் நடத்துகிறதோ அப்படி.
அதாவது, மக்களிடம் புகைப்பிடிக்காதீர்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அதே அரசுதான், சிகரெட்டுகளை தயாரித்து அதிக லாபமும் ஈட்டுகிறது. இதனால், சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை படங்களை போடுவதையோ அல்லது பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை விதிப்பதையோ அரசு தீவிரமாகச் செயல்படுத்துவதில்லை.
வரிப்பணத்துக்காக மக்களின் உயிர் பலி
சீன அரசாங்கத்திற்குத் தேவையான மொத்த வரி வருவாயில் சுமார் 7% முதல் 10% வரை இந்த சிகரெட் நிறுவனத்திடம் இருந்துதான் கிடைக்கிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கும், அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும் இந்த சிகரெட் விற்பனை பணம் தான் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதனால், சிகரெட் விற்பனையைக் குறைக்க அரசாங்கமும் ஆர்வம் காட்டுவதில்லை.
ஏமாற்று வேலை
மேலைநாடுகளில் குறைந்த தார் கொண்ட சிகரெட்டுகள் பாதுகாப்பானவை என்று விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனா டுபாகோ நிறுவனம், குறைந்த தார் கொண்ட சிகரெட்டுகள் உடலுக்குக் கெடுதல் இல்லை என்றும், மூலிகைகள் கலந்த சிகரெட் என்றும் பொய் விளம்பரங்களைச் செய்து மக்களைத் தொடர்ந்து புகைப்பிடிக்கத் தூண்டுகிறது. அங்கே மருத்துவர்கள் கூட.. இந்த சிகரெட் அடிக்கலாம் என்று பேஸ்ட் விளம்பரம் போல விளம்பரம் செய்யும் அவலம் உள்ளது.
அதேபோல் சீனாவின் பிரம்மாண்ட உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுத் திட்டமான பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தை பயன்படுத்தி சிகரெட் விற்கவும் சீனா முயல்கிறது. இதன் மூலம் சீனா டுபாகோ நிறுவனம் தனது சிகரெட் விற்பனையை உலக அளவில் விரிவாக்குவதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தி வருகிறது.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட 125-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தனது சிகரெட்டுகளை ஏற்றுமதி செய்வதோடு, அந்நாடுகளில் புகையிலை இலைகளை நேரடியாக விற்பனை செய்யவும் சீனா முயன்று வருகிறது. சில நாடுகளில் சிகரெட் இறக்குமதிக்குக் கடுமையான சட்டக் கட்டுப்பாடுகள் இருக்கும் பட்சத்தில், இந்த அரசு நிறுவனம் கிளை நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்களின் வழியாகவும் கடத்தல் மூலமாகவும் தனது தயாரிப்புகளை அந்நாடுகளுக்குள் அனுப்பி புதிய வாடிக்கையாளர்களை உருவாக்கி வருகிறது.
தனிநபர்களின் தவறான பழக்கம் என்று பார்க்கப்பட்ட புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு பின்னால், ஒரு நாட்டின் அரசாங்கமே தனது லாபத்திற்காகச் கோடிக்கணக்கான மக்களை ஆபத்தில் தள்ளுகிறது என்பதை இந்த ஆய்வு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.