50% ஹோம் லோன் EMI கட்டினால் போதும்.. ஜாயிண்ட் லோன் பற்றி தெரியுமா? ஆனால் ஒரு ட்விஸ்ட் இருக்கு | Taking a Joint Home Loan? Key Ownership, Tax and Exit Rules You Must Know Before Signing document

Spread the love

Business

oi-Vigneshkumar

சென்னை: கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் ஹோம் லோன் எடுக்கும்போது பலரும் ஜாயிண்ட் லோன் முறையில் எடுக்கிறார்கள். ஒரு பக்கம் இதன் மூலம் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கிறது என்றாலும் இதில் சில சிக்கல்களும் இருக்கவே செய்கிறது. எனவே, ஜாயிண்ட் லோன் எடுக்கும் முன்பு அதை நாம் கவனிக்க வேண்டியது அவசியமாகும்.

சொந்த வீடு என்பது இப்போதும் கூட இந்தியாவில் பல கோடி பேருக்கு கனவாக இருக்கிறது. அப்படிப்பட்ட கனவை நனவாக்கும்போது, பலரும் இப்போது ஜாயிண்ட் லோன் வாங்குகிறார்கள். கணவன் மனைவி இணைந்து இதுபோல ஜாயிண்ட் லோன் வாங்குவது அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அதிக தொகையைக் கடனாகப் பெற முடியும். மேலும், மாத தவணை (சுமையும் இருவருக்கும் பகிரும். இருவரும் வேலைக்கு செல்லும் சூழலில் இது நமக்கு மிக பெரிய பலனை தரும்.

home loan personal finance

ஜாயிண்ட் லோன்

அதேநேரம் அதிக கடன் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் ஜாயிண்ட் லோன் எடுப்பது சரியான முடிவாக இருக்காது எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், “வீட்டு கடனை பொறுத்தவரை வெறுமன வட்டி விகிதம் மட்டுமே முக்கியமல்ல. கடன் எப்படி அமைக்கப்படுகிறது என்பது தான் நீண்ட காலத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

அதாவது ஜாயிண்ட் லோன் எடுப்பதற்கு முன் வீட்டின் உரிமை யாருக்குச் செல்லும்.. டவுன் பேமேண்ட் யார் செலுத்துகிறார்கள், EMIஐ யார் எவ்வளவு கட்டப் போகிறார்கள் என்பது குறித்துத் தெளிவான திட்டம் இருக்க வேண்டும். எல்லா தம்பதிகளுக்கும் 50:50 பங்கு என்ற முறை பொருந்தாது! ஏனென்றால் சில குடும்பங்களில் கணவர் அதிகமாக சம்பாதிக்கலாம்.. சில குடும்பங்களில் மனைவி அதிகம் சம்பாதிக்கலாம். எனவே, எடுத்தும் கவிழ்த்தோம் என 50:50 என போடுவது செட் ஆகாது. இதனால் ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும்.

கவனம்

குறிப்பாக திடீரென ஏற்படும் வேலை இழப்பு, தொழில் தொடங்குதல், உயர்கல்வி அல்லது குழந்தை பராமரிப்புக்காக வேலையில் விடுவது போன்ற சூழல்கள் ஏற்படும்போது EMI கட்டுவதை நிறுத்தினால் என்ன ஆகும் என்பது முக்கியமான கேள்வியாகும். அதேநேரம் என்ன காரணமாக இருந்தாலும் சரி, கடனை இருவரும் பிரித்தே கட்ட வேண்டும். ஏனென்றால் வங்கியின் பார்வையில் இருவரும் முழு கடனுக்கும் பொறுப்பாளிகள்!

அதாவது தம்பதிகள் தங்களுக்குள் 60:40, 30:70 என எந்தவொரு உடன்பாடு செய்திருந்தாலும் அதை எல்லாம் வங்கி கண்டுகொள்ளாது. ஒருவரால் EMI செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், மீதமுள்ள நபர் தான் முழு தவணையையும் செலுத்த வேண்டும். நான் எனது போர்ஷனை மட்டும் தான் கட்டுவேன் என அவர் சொல்லக்கூடாது. பொதுவாக வீட்டுக்கடன் என்பது 20 முதல் 25 ஆண்டுகள் வரை நீளும் என்பதால் இந்த விஷயங்களை எல்லாம் நாம் கவனமாக பார்க்க வேண்டும்!

வரி சலுகை

அடுத்து முக்கியமானது வரி சலுகை.. உதாரணமாக, ஒருவர் 30% வருமான வரி பிரிவு இருக்கிறார். இன்னொருவர் வரி வரம்பிற்கு குறைவாக இருக்கிறார் என வைத்து கொள்வோம். அது போன்ற சூழல்களில் இருவரும் சமமாக கடனைப் பிரிப்பது தான் சரியாக இருக்கும்.. அதேநேரம் இதை வெறுமன நாம் தற்போது வரும் வருமானத்தை மட்டும் வைத்து முடிவு செய்யக்கூடாது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்றாலும் அதையும் யோசித்தே இதில் முடிந்தவரை உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்!

மேலும், இப்போது ஜாயிண்ட் லோன் எடுத்துவிட்டு பிறகு மாற்றிக்கொள்ளலாம் என நினைத்து எடுத்துவிடாதீர்கள். ஏனென்றால் ஜாயிண்ட் லோனில் இருந்து ஒருவரை நீக்குவது எளிதான செயல்முறை அல்ல. அதற்கு வங்கியின் ஒப்புதல் அவசியம். மீதமுள்ள நபரின் வருமானம், கடன் திருப்பிச் செலுத்தும் திறன் உள்ளிட்ட விவரங்களை வங்கி மீண்டும் மதிப்பீடு செய்யும்.

ரொம்ப முக்கியம்

அடுத்து இந்த விஷயம் ரொம்பவே முக்கியமானது. அதாவது கடனில் இருந்து பெயர் நீக்கப்பட்டாலும், வீட்டின் உரிமை தானாக மாறாது. கடனை யார் கட்டுவது என்பதும் சொத்து யாருக்கு செல்லும் என்பதும் தனித்தனி விஷயம். சொத்து உரிமையை மாற்ற வேண்டுமெனில் அதற்கு உரிமை மாற்ற ஆவணம் தேவைப்படும். எனவே, ஜாயிண்ட் லோன் லோன் எடுக்கும் முன்பு ஒரு முறை 10 முறை இதையெல்லாம் யோசித்து முடிவு எடுப்பது சரியாக இருக்கும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *