Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: நட்சத்திர கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மற்றும் அவரின் காதலி அக்ரிதி அகர்வால் இருவருக்கும் நடந்த நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டு பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் பிரித்வி ஷா – அக்ரிதி அகர்வால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது 6 மாதத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருக்கின்றனர்.
இந்திய கிரிக்கெட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் பிரித்வி ஷா. அடுத்த சச்சின் டெண்டுல்கராக பிரித்வி ஷா உருவாகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ஊக்க மருந்து பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கினார். இதன்பின் உள்ளூர் போட்டிகளிலேயே கவனம் செலுத்தாத பிரித்வி ஷா, ஃபிட்னஸிலும் கொஞ்சம் கூட கவனம் செலுத்தவில்லை.

ஒரு கட்டத்தில் ஐபிஎல் ஒப்பந்தமே கிடைக்கவில்லை. இருப்பினும் கடந்த சீசனில் டெல்லி அணி அவரை அடிப்படை தொகைக்கு வாங்கியது. சர்வதேச ஜாம்பவான்கள் கூட பிரித்வி ஷாவுக்கு கடிதம் மூலமாக அட்வைஸ் கொடுத்தனர். இதன்பின் ரஞ்சி டிராபியில் மும்பை அணியில் இருந்து விலகிய பிரித்வி ஷா, மகாராஷ்டிரா அணிக்காக ஆடி வருகிறார்.
இதனிடையே பிரித்வி ஷா சொந்த வாழ்க்கையிலும் அடுத்தக் கட்டத்திற்கு சென்றார். பிரித்வி ஷா மற்றும் அவரின் காதலி அக்ரிதி அகர்வால் இருவருக்கும் மார்ச் மாதத்தில் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. அதன் புகைப்படங்களை கூட இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். இதனால் பிரித்வி ஷா மீண்டும் கிரிக்கெட்டில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நிச்சயதார்த்தம் முடிவடைந்த 6 மாதங்களிலேயே பிரித்வி ஷா – அக்ரிதி அகர்வால் இருவரும், தங்களின் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அக்ரிதி அகர்வால் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், நாங்கள் இருவரும் இணைந்து கனத்த இதயத்துடன் எங்கள் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளோம்.
இருவரின் எதிர்கால இலக்குகளும், அதற்கான பாதைகளும் வெவ்வேறாக இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த கடினமான சூழலில் எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதலே அக்ரிதி அகர்வால் பல்வேறு பதிவுகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். தற்போது இந்த உறவும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் பிரித்வி ஷாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.