India
oi-Halley Karthik
ஜெய்ப்பூர்: அரசு பள்ளிகளை பாதுகாப்போம் என்று கரப்பான் ஜனதா கட்சி (CJP) கள ஆய்வை மேற்கொண்டு வருகிறது. ராஜஸ்தானில் பள்ளிகளை ஆய்வு இந்த அமைப்பினர் ஆய்வு செய்ததில்.. 611 அரசு பள்ளிகளுக்கு சொந்த கட்டிடம் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இதனை ஆளும் கட்சி சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது.
அரசு பள்ளி ஒன்று மாட்டு தொழுவத்தில் செயல்பட்டு வருவதாக புகார் வந்ததையடுத்து CJP குழுவினர் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து வலதுசாரி அமைப்பை சேர்ந்த நபர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சிகள் அரசு பள்ளிகள் குறித்து கேள்வி எழுப்ப தொடங்கியிருந்தன. இதையடுத்து 611 பள்ளிகளின் நிலைமை தெரிய வந்திருக்கிறது.

2025-2026ம் ஆண்டுக்கான கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் தரவுகளின்படி, 611 பள்ளிகள் கட்டிடங்கள் இன்றி இயங்கி வருகின்றன. இதில் 10 பள்ளிகள் பெண்கள் பள்ளிகளாகும்.
தலைநகர் ஜெய்ப்பூரில் மட்டும் 38 பள்ளிகளுக்கு கட்டிடங்கள் இல்லை. ஜாலாவார் மாவட்டத்தின் அக்லேரா பகுதியில் அதிகபட்சமாக 23 பள்ளிகள் கட்டிடங்கள் இன்றி உள்ளன. சொந்த கட்டிடங்களை கொண்டுள்ள, 64,484 அரசுப் பள்ளிகளில் 2,047 பள்ளிகளில் கழிப்பறை வசதியும், 1,049 பள்ளிகளில் குடிநீர் வசதியும் இல்லை என்று அரசு தரப்பு தெரிவித்திருக்கிறது.
தற்போது ராஜஸ்தானில் பாஜகதான் ஆளும் கட்சியாக இருக்கிறது. பள்ளிகளின் நிலைமை இவ்வளவு மோசமாக இருப்பதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று பாஜக பழிபோட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறது. ஜாலாவர் பள்ளி விபத்துக்கு பிறகு நடத்தப்பட்ட தணிக்கையில் பள்ளிகளின் மோசமான நிலை தெரிய வந்திருப்பதாகவும், முந்தைய அரசின் பாவங்களை நாங்கள் சரி செய்து வருகிறோம் என்றும் பாஜக கூறியிருக்கிறது.
CJP ஆய்வும் சர்ச்சையும்
ஜெய்ப்பூர் அருகே பக்ரு பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளி மாட்டு தொழுவத்தில் இயங்கி வருவதாக கூறப்பட்ட புகாரை ஆய்வு செய்ய சென்ற கரப்பான் ஜனதா கட்சி அமைப்பின் குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த பள்ளியின் கட்டிடம் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் தற்காலிகமாக மாடு கட்டப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
பள்ளிகளை சரி செய்யவும், புதுப்பிக்கவும் ரூ.550 கோடியும், புதிய கட்டிடங்களை கட்ட ரூ.450 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக ராஜஸ்தான் அரசு அறிவித்திருக்கிறது.