International
oi-Vigneshkumar
பாரிஸ்: 7,500+ வைரங்கள், 1,400+ மரகதங்கள், மாணிக்கங்கள், நீலக்கல் மற்றும் முத்துக்களுடன் இந்திய மகாராஜா ஒருவர் ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டையும் அதிர வைத்து இருக்கிறார். அவரது இந்த பயணம் ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியச் சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தாலும் கூட பல மன்னர்கள் இருந்தனர். அப்போது மன்னர் குடும்பங்களின் செல்வமும், அவர்களின் ஆடம்பர வாழ்க்கையும் பலரையும் வியக்க வைப்பதாகவே இருந்தது. அப்படி இந்திய மன்னர் ஒருவர் பிரான்ஸிற்கு சென்ற ஒரு பயணம் ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்தையும் வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து நாம் பார்க்கலாம்!

பிரான்ஸ் மன்னர்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரம் பல கோடீஸ்வரர்களை கண்டிருக்கிறது. ஆனால், 1928ஆம் ஆண்டில் அங்கு நடந்த ஒரு நிகழ்வு உலக வரலாற்றிலேயே அதுவரை கண்டிராத ஒன்றாக அமைந்தது. பாட்டியாலாவின் மகாராஜாவான பூபிந்தர் சிங் பாரிஸில் காலடி எடுத்து வைத்த அந்த நொடியில்.. உலகளாவிய நகைக் கடைகளின் இதயப் பகுதியாக இருக்கும் பிளேஸ் வெண்டோம் (Place Vendôme) வீதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏனென்றால் மகாராஜா பூபிந்தர் சிங் பாரிஸிற்கு தனியாகச் செல்லவில்லை. அவருடன் நாற்பதுக்கும் மேற்பட்ட உதவியாளர்களும், சீக்கிய பாதுகாவலர்களும் என ஒரு மாபெரும் அரச படையே பாரிஸிற்கு சென்றது. மாபெரும் ஊர்வலம் போலவே அவர்கள் பாரிஸ் வீதிகளில் வலம் வந்தனர். அவர்கள் வெறும் கையோடு வரவில்லை.. அவர்களின் கைகளில் பாதுகாப்பான இரும்புப் பெட்டிகளும், புதையலைப் போன்ற நகைப் பெட்டிகளும் நிறைந்திருந்தன. பாரிஸ் மக்கள் உறைந்துபோய் பார்க்கும் வகையில் இந்த காட்சி அமைந்தது.
எல்லாமே வைரம்
மேலும், அவரது ஊழியர்கள் எடுத்துச் சென்ற பெட்டிகளில் என்ன இருந்தது என்பதும் அப்போது விவாதமாக மாறி இருந்தது. அந்தப் பெட்டிகளுக்குள் 7,500க்கும் மேற்பட்ட வைரங்கள், 1,400க்கும் அதிகமான மரகதங்கள், ஏராளமான மாணிக்கங்கள், நீலக்கல் மற்றும் முத்துக்கள் நிறைந்திருந்தன. ஐரோப்பாவின் முன்னணி நகை வடிவமைப்பாளர்களையே பிரமிக்க வைக்கும் அளவிற்கு அங்கே ஒரு மாபெரும் புதையலே கொண்டுவரப்பட்டிருந்தது.
அப்போது பாரிஸ் நகரம் முழுவதும் ஒரே ஒரு கேள்வி தான் எதிரொலித்தது.. இந்த எண்ணற்ற விலைமதிப்பற்ற கற்களைக் கொண்டு நகைகளை வடிவமைக்க மகாராஜா எந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதே அந்த கேள்வி! இறுதியாக, மகாராஜா எடுத்த முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பாரிஸின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமிக்க நகை நிறுவனமான புஷெரான் நிறுவனத்திற்குள் பூபிந்தர் சிங் நுழைந்தார்.
திட்டம் என்ன
அங்கு ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட ரெடியாக இருக்கும் நகைகளை வாங்குவது அவரது திட்டம் இருக்கவில்லை. மாறாக, தன்னிடம் இருந்த விலைமதிப்பற்ற கற்களை அசாத்தியமான கலைப் படைப்புகளாக மாற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார். மகாராஜாவின் கோரிக்கையை நிறைவேற்றுவது புஷெரான் நிறுவனத்தின் கலைஞர்களுக்கே பெரிய சவாலாக அமைந்தது.
இருப்பினும், அவர்கள் இரவு பகல் பார்க்காமல் தீவிரமாக வேலை செய்தனர். அதன் விளைவாக கம்மல், வளையல்கள், இடுப்புப் பட்டைகள் மற்றும் அரச கிரிட ஆபரணங்கள் என மொத்தம் 149 பிரத்தியேக ஆபரணங்கள் உருவாக்கப்பட்டன. இது வெறும் நகைகளுக்கான ஆர்டர் மட்டுமல்ல, உலக நகை வடிவமைப்பு வரலாற்றிலேயே முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இதே காலகட்டத்தில் தான் கார்டியர் நிறுவனத்திடமிருந்து உலகப் புகழ்பெற்ற ‘பாட்டியாலா நெக்லஸ்’ என்ற மாலையையும் அவர் வாங்கினார். இதில் சுமார் 3,000 வைரங்களும், புகழ்பெற்ற 234 கேரட் ‘டி பீர்ஸ்’ (De Beers) வைரமும் பதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மறக்க முடியாத பயணம்
சுமார் ஒரு நூற்றாண்டு காலம் கடந்த பின்னரும், மகாராஜாவின் அந்தப் பாரிஸ் பயணம் இன்றும் உலக ஆடம்பர வரலாற்றில் ஒரு முக்கியமான ஒன்றாகப் பேசப்படுகிறது. வெறும் 6 அடி உயரமுள்ள மாபெரும் மகாராஜா, 40 உதவியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வைரங்களுடன் வந்து ஒட்டுமொத்த பாரிஸ் நகரத்தையே வியப்பில் ஆழ்த்திய அந்த தருணம், ஆடம்பரம் என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தத்தை கொடுத்தது.

