நமது நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை இன்னும் சில நாள்களில் கொண்டாடப் போகிறோம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாய்க் கிடந்து, அவர்கள் சொல்கிற மாதிரி நடந்துகொண்டிருந்த நாம், நம்மை ஆளும் உரிமையை நமக்கே பெற நூறு ஆண்டுகளுக்கு மேல் போராட வேண்டி இருந்தது.
பாடுபட்டு சுதந்திரம் பெற்றபிறகு கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் என எல்லாத் துறைகளிலும் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது நம் நாடு. இந்தியர்களின் ஆயுள் காலம் ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது.
இந்தியப் பொருளாதாரம் 3.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ளதாக முன்னேற்றம் கண்டிருக்கிறது. விண்வெளியில் ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பம் உலகமே இந்தியாவை வியந்து பார்க்கிறது.
இப்படி எல்லா வகையிலும் இந்திய நாடும் இந்தியப் பொருளாதாரமும் முன்னேற்றம் கண்டுவரும் வேளையில், தனிமனிதர்களின் பொருளாதார வளர்ச்சியும் நன்கு உயர்ந்திருக்கிறது. இன்றைக்கு ஒரு சராசரி இந்தியனின் ஆண்டு வருமானம் 3000 அமெரிக்க டாலருக்கு மேல் உயர்ந்திருக்கிறது.
இதனால் இந்திய மக்களின் சேமிப்பும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இந்திய மக்கள் இந்திய வங்கிகளில் ரூ.250 லட்சம் கோடியை பிக்சட் டெபாசிட் கணக்கில் வைத்திருக்கிறார்கள். ஆண்டுதோறும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வீடுகளையும், தங்கத்தையும் வாங்கிச் சேர்க்கிறார்கள்.
எனினும், இந்திய மக்கள் முதலீடு செய்து, பணவீக்கத்தைவிட அதிகமான வருமானத்தைச் சம்பாதிக்கிறார்களா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக, இந்திய மக்கள் மூலதனத்துக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். வருமானம் குறைவாக இருந்தாலும், அசல் பணத்துக்கு எந்த நஷ்டமும் வந்துவிடக்கூடாது என்றே நினைப்பார்கள்.