91 காயங்களுடன் சிதைந்த பிஞ்சு உடல்: கேரளாவை உலுக்கிய படுகொலை – தாயின் காதலன் வெறிச்செயல்!

Spread the love

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை, தாயின் காதலனால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலில் 91 காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளிப்படுத்தியிருப்பது, இந்தக் கொடூர சம்பவத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது.

திருவனந்தபுரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுமங்காடு, பனவூர் பகுதியில் இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஒன்றரை வயது ஆண் குழந்தையான அர்ஷித், தாய் அகிலாவின் காதலனான அஷ்கர் என்பவரால் தொடர்ந்து சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், குழந்தை மிகக் கொடூரமான மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளானது தெரியவந்துள்ளது.

விரிவான பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, குழந்தையின் மார்பு மற்றும் தலையில் ஏற்பட்ட ஆழமான காயங்களே மரணத்திற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழந்தையின் உடலில் மொத்தம் 91 காயங்களைக் கண்டறிந்துள்ளனர். இதில் ஏழு விலா எலும்புகள் முறிவு, உள் உறுப்புகளில் கடுமையான பாதிப்பு, மற்றும் மண்டை ஓட்டிற்குள் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவு ஆகியவை அடங்கும். அஷ்கர் குழந்தையின் மார்பின் மீது ஏறி மிதித்ததால் விலா எலும்புகள் முறிந்து, உள் உறுப்புகள் சேதமடைந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

மேலும், குழந்தையின் பிறப்புறுப்பு மற்றும் வலது உள்ளங்காலில் சிகரெட் லைட்டரால் சுட்ட காயங்கள் இருந்ததும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குழந்தை ஒரு முறை மட்டும் தாக்கப்பட்டதற்கான அடையாளம் அல்ல, மாறாக தொடர்ச்சியான சித்ரவதைக்கு உள்ளானதற்கான சான்று என, காவல்துறை தரப்பில் நம்பப்படுகிறது.

அர்ஷித் இறப்பதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, அவனது இரண்டு கைகளிலும் கட்டுடன் காணப்பட்டிருக்கிறான். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கேட்டபோது, குழந்தை சைக்கிளில் இருந்து விழுந்துவிட்டதாக அஷ்கர் கூறியுள்ளான். மே 16 அன்று, அதாவது குழந்தை கொல்லப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு சமூக ஊடக பிரபலம் பேருந்து நிலையத்தில் அகிலாவையும், குழந்தையையும் சந்தித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்ந்ததற்காக அவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், குழந்தையின் இரு கைகளிலும் மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது. இதுபற்றி அந்த பிரபலம் கேட்டபோதும், குழந்தை சைக்கிளில் இருந்து விழுந்துவிட்டதாகவே தாய் கூறியுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை அன்று நடந்த விசாரணையில் அஷ்கர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பே அர்ஷித்தை கொல்ல முடிவு செய்ததாகவும், கடந்த ஒரு மாதமாக குழந்தையை சித்ரவதை செய்து வந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தை அழும்போது, சத்தம் வெளியே கேட்காமல் இருக்க துணியை வைத்து வாயை அடைத்துவிட்டு அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அகிலாவுடனான தனது வாழ்க்கைக்கு குழந்தை ஒரு தடையாக இருந்ததாக அஷ்கர் தெரிவித்துள்ளார்.

கைது

மே 29 அன்று, குழந்தை அழுததால் ஆத்திரமடைந்த அஷ்கர், குழந்தையின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். குழந்தை இறந்ததை உறுதி செய்த பிறகு, வீட்டில் இருந்த தடயங்களை அழித்து, வீட்டை சுத்தம் செய்துவிட்டு, குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு, உணவுக்குழாயில் உணவு சிக்கியதால் குழந்தை மயங்கி விழுந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார்.

காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், குழந்தையின் தாய் 21 வயதான அகிலா, தனது காதலன் மகனை பலமுறை தாக்குவதை நேரில் பார்த்ததாகவும், ஆனால் குழந்தையை பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அகிலா மீதும் வழக்குப் பதிவு செய்ய காவல்துறை ஆலோசித்து வருகிறது. அஷ்கர் மீது SC/ST (வன்கொடுமை தடுப்புச்) சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அஷ்கர் தனது முதல் மனைவியான அமினாவை கொடூரமாக தாக்கி, அவரை உடல் ஊனமுறச் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *