Admk former minister S.P.Velumani explains that we are united – ’நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்’ – எஸ்.பி. வேலுமணி விளக்கம்

Spread the love

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். அ.தி.மு.க என்பது எங்கள் உயிர் மூச்சு, நாங்கள் பதவிக்காக த.வெ.க-விற்கு ஆதரவு தரவில்லை. நானும், சி.வி. சண்முகமும் சில கோரிக்கைகள் வைத்தோம். அந்தக் கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டார்.

தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வோம். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

மக்கள் த‌.வெ.க-வை ஆதரித்தார்கள் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தில் ஆதரவு கொடுத்தோம். த.வெ.க தரப்பிலும் எங்களிடம் பதவி கேட்டு வரவில்லை என அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். தி.மு.க எதிர்ப்பு என்ற அடிப்படையில் ஆதரவு கொடுத்தோம் என சொல்லியிருக்கின்றனர்.

சி.வி சண்முகம் உட்பட அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இன்று காலை கூட அவரிடம் பேசிவிட்டு வந்தோம். நாங்கள் அண்ணன் தம்பியை போல ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை வளர்த்த கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதைத்தான் செய்வோம்.

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

கருத்து வேறுபாடு இருந்தது. அதை கலைத்துவிட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பொதுச் செயலாளரை பார்த்துவிட்டு வந்து விட்டோம். சி.வி. சண்முகமும், நாங்களும் ஒற்றுமையாக முடிவு எடுத்திருக்கிறோம். அவருடைய கருத்துதான் எங்களுடைய கருத்து. எங்களுடைய கருத்து தான் அவருடையது.

ஊடகங்கள், யூடியூப் போன்றவற்றை ஒரு தவறான எண்ணத்தை கொண்டு வந்து திணித்து மக்களை நம்ப வைக்க பார்க்கிறார்கள். புதிய அரசு இப்பேது தான் வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். குற்றங்கள், போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த அரசு பணியாற்ற வேண்டும்” என்றார்.

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனியாக ஆலோசனை நடத்தி வருவது குறித்த கேள்விக்கு, “யூகத்துக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம். அ.தி.மு.க மிகப்பெரிய கட்சி, நிறைய தோல்விகளை பார்த்திருக்கிறோம். துவண்டு போகாமல் தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றுவோம்” என பதிலளித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *