உலகளாவிய டிவி சந்தையில் தேவை குறைந்து வருவதும், லாபம் சரிந்து வருவதும், குறிப்பாக ஆக்ரோஷமான சீன பிராண்டுகளிடமிருந்து வரும் போட்டியும் தான் இதற்குக் காரணம். TCL, ஹைசென்ஸ் போன்ற நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே, பெரிய திரை கொண்ட டிவிகளை மிகக் குறைந்த விலையில் வழங்கி சந்தையில் தங்களுக்கு என ஒரு பெரிய இடத்தைப் பிடித்து வருகின்றன. இதனால், எல்ஜி போன்ற பாரம்பரிய பிரீமியம் பிராண்டுகள் லாபகரமாகச் செயல்படுவது பெரும் சவாலாக மாறியுள்ளது.
சந்தை ஆய்வு நிறுவனமான ஓம்டியாவின் (Omdia) தரவுகளின்படி, கடந்த ஆண்டு உலகளாவிய டிவி ஏற்றுமதியில் TCL சுமார் 14 சதவீதத்தையும், ஹைசென்ஸ் 12.5 சதவீதத்தையும் கைப்பற்றின. ஆனால், எல்ஜியின் சந்தைப் பங்கு கடந்த சில ஆண்டுகளாக 10 சதவீத அளவிலேயே இருந்து வருகிறது. மேலும் 2024 முதல் TCL, ஹைசென்ஸ் மற்றும் ஷாவ்மி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சந்தைப் பங்கு சாம்சங் மற்றும் எல்ஜியை விட அதிகமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லாபம் தான் பிரச்சனையா?
ஆம், லாபம் ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. எல்ஜியின் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் பிரிவு இந்த ஆண்டு சற்று மீண்டிருந்தாலும், நீண்டகாலமாகவே அழுத்தத்தில் உள்ளது. இந்த பிரிவின் லாப வரம்பு வெறும் 1 முதல் 2 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால், நீண்டகால லாபம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எல்ஜியின் பிரீமியம் OLED டிவிக்களால் கூட, அதிகரித்து வரும் உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகளை முழுமையாக ஈடுகட்ட முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது எல்ஜிக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பே, பல ஆண்டுகளாக நஷ்டத்தைச் சந்தித்த தனது ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை 2021-ல் முழுமையாக மூடியது. LG Wing போன்ற புதுமையான போன்களை அறிமுகப்படுத்தியும், சந்தையில் தாக்குப்பிடிக்க முடியாததால் அந்த முடிவை எடுத்தது. அப்போது, மின்சார வாகன பாகங்கள், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஸ்மார்ட் ஹோம் போன்ற எதிர்கால வளர்ச்சி உள்ள துறைகளில் கவனம் செலுத்தப் போவதாக எல்ஜி அறிவித்தது. டிவி வர்த்தகம் குறித்த இந்த செய்திகளும், நிறுவனத்தின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டது.
தற்போது எல்ஜி இந்த விற்பனை செய்தியை முழுமையாக மறுத்துள்ளதால், டிவி பிரியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். இருப்பினும், உலக சந்தையின் போட்டிச் சூழல், லாபத்தை மையமாகக் கொண்ட நிறுவனத்தின் எதிர்கால முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.