மகாராஷ்டிராவில் சிவசேனா 2022-ம் ஆண்டு பிளவை சந்தித்தது. அக்கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் துணையோடு கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். ஆனாலும் கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தவ் தாக்கரே கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த எம்.பி.க்களையும் தங்களது பக்கம் இழுக்க ஏக்நாத் ஷிண்டே முயற்சி செய்வதாக செய்தி வெளியானது.
உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ச்சியாக ஏக்நாத் ஷிண்டேயை சந்திப்பது, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா நிர்வாகிகளை சந்திப்பது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் மொத்தமுள்ள 9 எம்.பி.க்களில் 6 பேர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து தனது கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள தனது வீட்டில் கூட்டி இருந்தார். ஆனால் அந்த கூட்டத்தில் வெறும் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

மற்ற 5 பேர் கலந்து கொள்ளவில்லை. உத்தவ் தாக்கரே கூட்டியிருந்த அக்கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் கூட்டத்திற்குப் பிறகு அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில்,”‘அரவிந்த் சாவந்த், ராஜாபாவ் வாஜே, சஞ்சய் தினா பாட்டீல் மற்றும் அனில் தேசாய் ஆகியோர் மாதோஸ்ரீயில் நடந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
நாகேஷ் அஷ்டிகர், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தேஷ்முக், பௌசாஹேப் வக்சூர் மற்றும் ஓம் ராஜே நிம்பல்கர் ஆகியோர் ஆன்லைனிலும் தொலைபேசியிலும் கலந்துகொண்டனர். அஷ்டிகர் தனது தொகுதியில் சட்டமேலவை தேர்தலில் பிஸியாக இருக்கிறார். ஜாதவ் உத்தவ் தாக்கரேவுடன் பேசி இரண்டு நாட்கள் கழித்து அவரை சந்திப்பதாக கூறியிருக்கிறார். தேஷ்முக்கின் வீட்டில் திருமணம் நடக்கிறது. நிம்பல்கரின் மகனைப் போலவே வக்சூரின் மனைவியும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். ஒன்பது எம்.பி.க்களும் ஒற்றுமையுடனும், கட்சிக்கு விசுவாசத்துடனும் இருக்கின்றனர்.’ என்றார்,
கடந்த சில மாதங்களாக, சிவசேனா (உத்தவ்) எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது கட்சியின் பிற தலைவர்களை அடிக்கடி சந்தித்து பேசினர். ஹிங்கோலி எம்.பி. அஷ்டிகர், சமீபத்தில் ஷிண்டேவை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பேசினார். நாசிக்கைச் சேர்ந்த வாஜே, ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவை சந்தித்தார். ஷிர்டி தொகுதி எம்.பி. வாக்சௌரே மாநில தொழில்துறை அமைச்சர் உதய் சாமந்தை சந்தித்து பேசினார்.
இது குறித்து சஞ்சய் ராவத், `கடந்த மாதம் ஜாதவ், அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.