நடிகர் அருண் விஜய், இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ‘இருளன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சிரத்தை எடுத்து வேலை பார்ப்பார்.
அப்படி ‘இருளன்’ படத்தின் சண்டைக் காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும்போது, அவருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவருடைய தொடைப் பகுதியில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது.
இந்தக் காயம் குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அருண் விஜய், “காயங்கள் காரணமாக வழக்கமான பணிகளை நிறுத்தும்போது, மிகவும் மனவேதனையாக இருக்கிறது.
‘இருளன்’ படப்பிடிப்பில் தொடை தசைநார் கிழிவு ஏற்பட்டது. இப்போது அதற்கான சிகிச்சைகளை எடுத்து வருகிறேன். இதெல்லாம் விளையாட்டின் ஒரு பகுதிதான். பலத்தோடு மீண்டும் வருவேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

‘இருளன்’ படத்தில் அருண் விஜய் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. அத்தோடு பீரியட் பின்னணி கொண்ட படமாகவும் இது உருவாகிவருவதாகச் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் வெளிவந்த மோஷன் போஸ்டரிலும் அப்படியான காட்சிகளே இடம்பெற்றிருந்தன. அருண் விஜய்யோடு ‘ஜெயிலர்’ மிர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.