அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள புதிய படத்துக்கு ‘அன்பில் அவன்’ என்று பெயரிடப்பட்டு டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தின் கதையை எழுதி இருக்கிறார்.
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட்.12) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அசோக் செல்வன், “என்னுடைய படம் வெளியாகி ரொம்ப நாள்களாகிவிட்டன. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன.
‘ப்ளூ ஸ்டார்’தான் கடைசியாக வந்தது. என்ன சார் படமே நடிக்கிறது இல்லையா? என்று முதலில் பார்க்கிறவர்கள் கேட்டார்கள். பிறகு நண்பர்கள் கேட்டார்கள்.
அதன் பிறகு வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் கேட்டார்கள். ஒரு கட்டத்தில் கண்ணாடிப் பார்த்து ‘எப்போடா படம் வரும்?’ என்று என்னை நானே கேட்க ஆரம்பித்துவிட்டேன். ஒவ்வொரு படமும் அதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை படம் வெளியாக வேண்டும் என்று Attendance போட வேண்டும் என்று நினைக்கின்ற ஆள் நான் இல்லை. ஒவ்வொரு படமும் புதிதாகப் பண்ண வேண்டும். புதிய முயற்சி எடுக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆள் நான்” என்று பேசியிருக்கிறார்.