
கொல்கத்தாவின் தாலா பார்க் பகுதியில் உள்ள மொஹித் மஞ்சா அரங்கில், நடன தயாரிப்பு குழுவான Nitya – Faculty of Sight சார்பில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி ‘மகாவித்யா’ நடன நாடகம் நடைபெற்றது. இதில் காளி வேடத்தில் நடித்த கலைஞர் அணிந்திருந்த ஆடை பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நிகழ்ச்சியின் காட்சிகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளனர். அதில், நடன அமைப்பு, நடன அசைவுகள் மற்றும் மேடை வெளிப்பாடு உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட கலைஞரின் “படைப்பாற்றல் சார்ந்த முடிவுகள்” என தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சிக்காக கலைஞருக்கு குறிப்பிட்ட கதைக்களம் மற்றும் ஆடியோ மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இறுதி நிகழ்ச்சிக்காக திட்டமிடப்பட்டிருந்த ஆடையில் அந்த கலைஞர் ஒத்திகை பார்க்கவில்லை என்றும், இதனால் அவர் மேடையில் எந்த ஆடையை அணிந்து வருவார் என்பது தங்களுக்கு முன்கூட்டியே தெரியவில்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இரண்டு துணை நடனக் கலைஞர்கள் அணிந்திருந்ததைப் போன்ற ஆடையிலேயே காளி வேடத்தில் நடித்த கலைஞரும் வருவார் என தாங்கள் எதிர்பார்த்ததாகவும், ஆனால் இறுதி நிகழ்ச்சியின்போது அவர் “முற்றிலும் மாறுபட்ட, குறிப்பிடப்படாத ஆடையில்” மேடையேறியதாகவும் குழு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்தச் சம்பவம் “விரும்பத்தகாததும், ஏற்புடையதல்லாததும்” என்பதை ஏற்றுக்கொண்ட ஏற்பாட்டாளர்கள், ஆடை மற்றும் மேடை வெளிப்பாடுகளில் போதிய ஒருங்கிணைப்பும் கண்காணிப்பும் இல்லாதது தவறு என ஒப்புக்கொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அனுபவம் வாய்ந்த மூத்த நடனக் கலைஞர்கள் என்பதால், அவர்களின் தொழில்முறை அணுகுமுறையில் நம்பிக்கை வைத்து கணிசமான படைப்புச் சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் குழு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பார்வையாளர்களும் சமூக வலைதள பயனர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். குறிப்பாக, இந்து மதத்தில் வழிபாட்டுக்குரிய தெய்வமாகக் கருதப்படும் காளியின் தோற்றம் இன்னும் கண்ணியமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என சிலர் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பார்வையாளர்கள், கலைஞர்கள் மற்றும் தங்களது நலன் விரும்பிகள் அனைவரிடமும் ஏற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், இனிவரும் நிகழ்ச்சிகளில் ஆடை அலங்காரம், நடனக் காட்சிகள் மற்றும் மேடை வெளிப்பாடுகள் அனைத்தும் நிகழ்ச்சிக்கு முன்பே இறுதி செய்யப்பட்டு முறையாகச் சரிபார்க்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.
காளி வேடம் தொடர்பான இந்த சர்ச்சை, பாரம்பரிய தெய்வ உருவங்களை கலை நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தும்போது கலைச் சுதந்திரத்துக்கும் மத உணர்வுகளுக்கும் இடையே கடைபிடிக்க வேண்டிய சமநிலை குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.