நாம் அன்றாடம் பயன்படுத்தும் ChatGPT போன்ற AI கருவிகள் எவ்வளவு எளிமையாக, எவ்வளவு விரைவாக நமக்கு பதில்களைத் தருகின்றன! ஒரு மின்னஞ்சல் எழுதச் சொன்னால் சில நொடிகளில் தந்துவிடுகிறது. ஆனால், அந்த ஒவ்வொரு நொடிக்கும் பின்னால், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு விலை கொடுக்கப்படுகிறது.
அதுதான் “தண்ணீர்’.
ஆம், நீங்கள் ChatGPT-யிடம் 100 வார்த்தைகளில் ஒரு மின்னஞ்சல் எழுதச் சொன்னால், கிட்டத்தட்ட 519 மில்லி லிட்டர் தண்ணீர் செலவாகிறது. அதாவது, ஒரு முழு தண்ணீர் பாட்டில் காலி!
நம்ப முடியவில்லையா?
இது வெறும் கற்பனை இல்லை. கலிஃபோர்னியா ரிவர்சைடு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில்தான் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. AI சேவைகளை வழங்கும் பிரம்மாண்டமான டேட்டா சென்டர்களை குளிர்விப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நேரடித் தண்ணீர் மற்றும் அந்த டேட்டா சென்டர்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பயன்படும் மறைமுகத் தண்ணீர் என இரண்டையும் கணக்கிலெடுத்தே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

எதற்காக இவ்வளவு தண்ணீர்? AI-யின் தாகம் தீராதது ஏன்?
AI டேட்டா சென்டர்கள் என்பவை சாதாரண கணினிகள் அல்ல. அவை பல்லாயிரக்கணக்கான உயர்-செயல்திறன் கொண்ட கிராபிக்ஸ் பிராசசிங் யூனிட்களை (GPUs) கொண்டவை. இந்த சிப்கள் தொடர்ந்து இயங்கும்போது, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வெப்பத்தை வெளியிடுகின்றன. இந்த வெப்பத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், மொத்த சிஸ்டமும் செயலிழந்துவிடும். இதைத் தவிர்க்கப் பயன்படுத்தப்படும் மிக பொதுவான முறைதான் ‘evaporative cooling’ எனப்படும் ஆவியாக்கி குளிர்விக்கும் தொழில்நுட்பம்.
இந்த முறையில், தண்ணீர் பெரிய குழாய்கள் மூலம் டேட்டா சென்டர்களுக்குள் செலுத்தப்பட்டு, சர்வர்களின் வெப்பத்தை உறிஞ்சிக்கொள்கிறது. பின்னர், அந்த வெப்பமான நீரின் ஒரு பகுதி நீராவியாக வளிமண்டலத்தில் வெளியிடப்படுகிறது. இப்படி உள்ளே கொண்டுவரப்படும் நீரில் சுமார் 80% ஆவியாகி நிரந்தரமாக இழக்கப்படுகிறது.
மீதமுள்ள நீர், அதிக வெப்பத்துடனும் சில ரசாயன எச்சங்களுடனும் மீண்டும் சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. ஒரே ஒரு பெரிய AI டேட்டா சென்டர் ஒரு நாளில் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு, 10,000 பேர் கொண்ட ஒரு சிறு நகரத்தின் குடிநீர், சுகாதாரம் மற்றும் விவசாயத் தேவைகளை விட அதிகம் என்பதுதான் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.