`ரூ.90,000 வாடகை கொடுத்தும் தண்ணீர் பிரச்னை’- புலம்பும் மும்பை இளைஞர் | வைரலாகும் வீடியோ! | A Mumbai resident went viral for venting about extreme water shortages in society despite paying ₹90,000 rent.

Spread the love

மும்பையில் இந்த ஆண்டு இன்னும் பருவ மழை தொடங்கவில்லை. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் சில நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் மும்பையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் அதிகமான கட்டடங்கள் டேங்கர் தண்ணீரை நம்பி இருக்கின்றன. மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தில் வாடகைக்கு வசிக்கும் நிகில் என்பவர், தண்ணீர் பிரச்னையைச் சுட்டிக்காட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி இருக்கிறது.

அவர் தனது பதிவில், தான் வசிக்கும் குடியிருப்பு கட்டட சொசைட்டியில் மாதம் ஒன்றுக்கு ரூ.70,000 வாடகை தொடங்குவதாகவும், தான் ரூ.90,000 வாடகை செலுத்துவதாகவும், இருப்பினும் குடியிருப்பாளர்களுக்கு சரியாகத் தண்ணீர் விநியோகம் இருப்பதில்லை என்று குறைபட்டுக்கொண்டுள்ளார்.

சொகுசு குடியிருப்பு வளாகத்தில் வசித்தாலும், போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், ஒழுங்கற்ற விநியோகத்தால் அடிக்கடி தண்ணீர் கிடைக்காமல் போவதாகவும், நிகில் குறிப்பிட்டுள்ளார்.

அடிக்கடி தண்ணீர் எதிர்பாராதவிதமாக நின்றுவிடுவதாகவும், குடியிருப்பாளர்கள் தண்ணீர் டேங்கர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “நான் வசிக்கும் கட்டடம் 37 மாடிகளைக் கொண்ட இரண்டு டவர்கள் ஆகும். இதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்வளவு பெரிய குடியிருப்பு கட்டடத்திற்கு டேங்கர் தண்ணீர் தீர்வாகாது.

கட்டடத்தில் வசிப்பவர்கள் அதிக வாடகை கொடுத்தாலும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்கள் உட்பட சில நேரங்களில் தண்ணீர் விநியோகம் தடைபடுகிறது. சமையல் மற்றும் சுகாதாரம் போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இவ்வளவு அதிக வாடகை செலுத்துவதை கற்பனை செய்து பாருங்கள், தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்க வேண்டும்” என்று அவர் வீடியோவில் கூறினார். இப்பதிவுக்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள் அனைத்து இடங்களிலும் இதேநிலைதான் என்று தெரிவித்து வருகின்றனர். மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் பருவமழை தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு இன்னும் தொடங்காமல் இருப்பது மாநகராட்சி நிர்வாகத்தைக் கவலையடையச் செய்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *