‘சுந்தரி’ சீரியல் மூலம் பலருக்கும் பேவரிட்டானவர் நடிகர் ஜுஷ்னு மெனன். அந்த சீரியலுக்குப் பிறகு இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘செல்லமே செல்லமே’ சீரியலில் நடித்து வருகிறார்.

இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என இந்த சீரியலில் அவருக்கு முதிர்ச்சியான கதாபாத்திரமே! இதற்கு மக்களின் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. அவருடன் ஒரு சாட் போட்டோம்.
நம்மிடையே பேசியவர், “சுந்தரி சீரியலுக்குப் பிறகு எனக்கு மறுபடியும் பிரேக் கிடைக்குமானு யோசனைகள் அதிகமாவே இருந்தது. ஆனால், ‘செல்லமே செல்லமே’ மீண்டும் எனக்கொரு பிரேக் தந்திருக்குனு சொல்லலாம். முதல்ல நான் இந்தக் கதை லவ் ஸ்டோரி மாதிரிதான் போகும்னு நினைச்சுட்டு இருந்தேன்.
ஆனால், இந்த சீரியலின் ஒன்லைன் சொல்லும்போதே, உங்களுக்கு ஜோடி கிடையாது. உங்களுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி, விவாகரத்து ஆகிடுச்சு. உங்களுக்கு ரெண்டு குழந்தைகளும் இருக்காங்கனு சொல்லிட்டாங்க.
அதன் பிறகு கதையை விரிவாகச் சொல்லும்போது, எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. ஏன்னா, இந்தக் கதையில என்னுடைய நடிப்பை இன்னும் நல்லாவே வெளிப்படுத்த முடியும்னு தோனுச்சு.

ரேஷ்மா முரளிதரனை இந்த சீரியலுக்குப் பிறகுதான் எனக்குத் தெரியும். அதுக்கு முன்னாடி அவங்களுடைய நேர்காணல்கள்தான் பார்த்திருக்கேன். அதைப் பார்த்துட்டு, இவங்க ரொம்ப ஆட்டிடியூட்னு நினைச்சேன்.
ஆனால், அப்படியெல்லாம் இல்ல. ரொம்பவே ஸ்வீட் அவங்க! எந்தவொரு பரிந்துரைகள் சொன்னாலும் உடனடியாக அதை எடுத்துப்பாங்க. பிறகு, லிதன்யா சிவாபாலன் பாப்பா இந்த சீரியலிலும் என்னுடன் இணைந்து நடிக்கிறாங்க.
அந்தப் பாப்பா, ‘சுந்தரி’ சீரியலிலும் என்னுடன் இணைந்து நடிச்சிருக்காங்க. அப்போ, ‘என்னடா அந்தப் பொண்ணு நடிப்புல மூழ்கி நீச்சல் அடிக்குது’னு ஆச்சரியமாகப் பார்ப்பேன்.
இப்போ விஜய் சார்கூடவும் அந்தப் பாப்பா நடிச்சிருக்காங்க. நிச்சயமாக எங்கேயோ போயிடுவாங்க!” என்றவர், “நான் இதுவரைக்கும் ஃபீமேல் ஓரியண்டட் சீரியல்லதான் நடிச்சிருக்கேன். அதனால எனக்குப் பிரச்னையும் கிடையாது. இது ஃபீமேல் ஓரியண்டட் கதைனு நினைச்சுட்டு நான் என்னுடைய வேலையை முழுமையாகப் பார்க்காமல் இருந்திருந்தால், என்னுடைய கதாபாத்திரம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்காது.
நம்முடைய கதாபாத்திரத்திற்கு முழுமையைக் கொடுத்தால்தான், அது முன்னிலை. சொல்லப்போனால், ‘சுந்தரி’ சீரியல்ல என்னுடைய கதாபாத்திரம் நெகடிவ் கதாபாத்திரம்தான். ஆனால், அதுக்கும் மக்கள் அளவில்லா அன்பை அள்ளித் தந்தாங்க.
‘சுந்தரி’ சீரியல்ல ஒரு காட்சியில உண்மையாகவே என்னை அடிச்சாங்க. ஒரு காட்சியில சாணியால் அடிச்சாங்க. அப்போ வலிச்சதுதான். ஆனால், அந்தக் கேரக்டருக்குத் தேவையானது.” என்றார்.

அவருடைய மனைவி பற்றிப் பகிர்ந்துகொண்டவர், “என்னுடைய மனைவி எனக்கு நல்ல ஃபிரண்ட். அவங்க என்னுடைய நடிப்புக்கு விமர்சகரும்கூட.
சில நேரங்கள்ல நீ இப்படிச் செய்திருக்கலாம்னு சொல்வாங்க. அதைத் திரும்பப் பார்க்கும்போதுதான், இன்னும் நல்லாவே நடிச்சிருக்கலாம்னு தோணும்” என முடித்துக் கொண்டார்.