TNPL 2026 தொடரின் 14-வது மற்றும் 15-வது லீக் போட்டிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளும், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளும் மோதின. இப்போட்டி திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மாலை நேரம் தொடங்கிய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சேலம் ஸ்பார்டன்ஸை வீழ்த்தியது.
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹரி நிஷாந்த் முதல் ஓவரிலே நான்கு பவுண்டரிகளை விளாசி ஒரு மாஸ் தொடக்கத்தை கொடுத்தாலும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த ஓவரில் ரன் ஓடுவதில் தடுமாற்றம் ஏற்பட்டு அணியின் கேப்டன் அபிஷேக் “கோல்டன் டக்கில்” ரன் அவுட் ஆனார்.
சிறிது நேரத்தில் ஹரி நிஷாந்தும் 18(10) மிட்-விக்கெட்டில் கேட்ச் செய்யப்பட்டு வெளியேறினார். முதல் மூன்று ஓவர்களிலே தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழக்க, காற்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பக்கம் சாய தொடங்கியது. அடுத்து வந்த ஆர்.விவேக் மற்றும் பூபதி குமார் கூட்டணி 37 ரன்களை சேர்க்க அதை தனது பவுலிங்கால் தகர்த்தார் எம்.சிலம்பரசன்.
தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய, நாங்கள் இருக்கிறோம் என்று ஈஷ்வர் மற்றும் ஹரீஷ் சேலத்தின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்கள் கூட்டணி 68 ரன்கள் சேர்த்து உயிர் கொடுத்தது ஸ்பார்டன்ஸ்க்கு, சிறப்பாக ஆடிய ஹரீஷ் 57*(35) அரைசதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் என்ற ஸ்கோரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-க்கு இலக்காக வைத்தது சேலம் ஸ்பார்டன்ஸ். சேப்பாக் சூப்பர் கில்லீஸின் எம். சிலம்பரசன் மற்றும் பிரேம் குமார் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
அதிரடி காட்டிய ஜெகதீசனின் 78 ரன்கள், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி எளிமையாக வெற்றி பெற வித்திட்டது..!
இரண்டாவதாக ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்கத்தில் மோகித் ஹரிஹரன் மற்றும் கே.ஆஷிக் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்தது. இருப்பினும், கேப்டன் என்.ஜெகதீசன் சேஸிங் பாதையின் ஒரு பகுதியை தனது கரங்களில் பிடித்துக்கொண்டார். இவருக்கு பக்கபலமாக மற்றொரு பகுதியை ஸ்வப்னில் சிங் பிடித்துக்கொள்ள, 26 பந்துகளில் 45 ரன்களை விளாசி சேலம் ஸ்பார்டன்ஸின் பந்து வீச்சை சிதறடித்தார்.
இறுதியாக வெற்றிக்கு 3 ரன்களே தேவைப்பட்ட நிலையில் ஸ்வப்னில் சிங் ஆட்டமிழந்ததால், ஆட்டத்தின் முடிவு மேலும் சுவாரசியமானது.
அதன் பின் வந்த தினேஷ் ராஜ் பிசக்கில்லாமல் ஆடி ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை அடித்து மேட்ச்சை முடித்து வைத்தார். இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. இதில் சிறப்பாக ஆடிய என்.ஜெகதீசன் 78(39) “மேன் ஆஃப் தி மேட்ச்” பெற்றார்.