மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் `துடக்கம்” என்ற சினிமா மூலம் திரைத்துறையில் அடியெடுத்துவைத்துள்ளார். அவர், டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது வன்முறை ஏவப்படுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருந்தார்.
விஸ்மயா மோகன்லால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தனது சொந்த மக்களுக்கு எதிராக ஒரு ஜனநாயக நாடு இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமா? நாட்டின் குடிமக்கள் தங்களது குரலை உயர்த்தும்போது, அதற்குப் பதிலளித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாகக் கடுமையான அடக்குமுறையைக் கையாண்டால், நாம் எந்த வகையான ஜனநாயகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைப் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
விஸ்மயாவின் இந்தப் பதிவைத் தொடர்ந்து அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் வலைத்தள பக்கங்களில் எதிர்ப்புதெரிவித்து அதிகமான பின்னூட்டங்கள் வந்தன. விஸ்மயாவின் தந்தை மோகன்லாலின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள பல்வேறு பதிவுகளுக்கும் எதிர்ப்பு கருத்துகள் பின்னூட்டங்களாக பதிவிடப்பட்டு வருகின்றன.
எதிர்ப்பு பின்னூட்டங்கள் சிலர், ”பிரித்விராஜுக்கு என்ன நிலைமை ஏற்பட்டது என்று உனது அப்பாவிடம் கேட்டால் சொல்வார்! திடீரென்று என்ன ஒரு குடிமைப் பொறுப்பு!” எனவும், “திரைப்படத்திற்கு மக்களை வரவழைக்க இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்தால் போதும் என்று யாராவது யோசனை சொன்னார்களா?” எனவும் சிலர் பதிவிடுள்ளனர்.
“பஹல்காமில் மதம் கேட்டுச் சாதாரண மனிதர்களைக் கொன்றபோது மௌனமாக இருந்தவர்களுக்கு, இப்போது பேசுவதற்கு ஆற்றல் வந்ததில் மகிழ்ச்சி” என்று காரசாரமாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.