CJP: “மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஏன் இன்னும் அமைதிகாக்கிறார்" – ராகுல் காந்தி கேள்வி

Spread the love

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது.

இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்தப் போராட்டத்தைக் கலைக்கும் வகையில் ஆளும் பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு, தடியடி தாக்குதல் எனக் வன்முறை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறது.

cjp protest in delhi
cjp protest in delhi

நேற்று இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முயன்றபோது அவை திட்டமிட்டு ஒத்திவைக்கப்பட்டதாகவும், நாடாளுமன்றத்துக்குள்ளேயே இணையம் துண்டிக்கப்பட்டதாகவும் எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகர் ஓம்.பிர்லாவை நேரில் சந்தித்து மனு அளித்திருக்கின்றனர்.

அதில், தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வி அமைப்பில் நிலவும் குளறுபடிகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடிடியடித் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், “மாணவர்களின் எதிர்காலம் மற்றும் தேசத்தின் கல்விச் சூழல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் முன்வர வேண்டும். நாட்டின் எதிர்காலமாக விளங்கும் இளைஞர்களின் குரலை நசுக்க அனுமதிக்க முடியாது. வீதிகளிலும் நாடாளுமன்றத்திலும் அவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தரத் தொடர்ந்து குரல் கொடுப்போம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டில் உள்ள கல்வி மற்றும் தேர்வு முறைகள் கரையான்களால் அரித்துப்போய் சீரழிந்துள்ளதை ஒட்டுமொத்த தேசமும் நன்கு அறியும்.

இளைஞர்கள் தங்களுக்கான நியாயமான உரிமைகளுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் போராடி வருகிறார்கள். ஆனால், நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு பிரதமர் மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட மன்னிப்புக் கேட்கவில்லை.

சபாநாயகரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்கள்
சபாநாயகரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்கள்

பிரதமர் ஏன் இந்த விஷயத்தில் அமைதி காக்கிறார்? அவர் உடனடியாக மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நியாயமான கேள்விகளைக் கேட்கும் மாணவர்களைத் தடியடி நடத்தி ஒடுக்கும் இந்த அராஜகப் போக்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாங்கள் இந்த முக்கியப் பிரச்னை குறித்துச் சபையில் விரிவாக விவாதிக்கவும், அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் விரும்பினோம். ஆனால், அரசு எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து ஒடுக்கியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எதற்காகத் தடியடி நடத்தப்பட்டது? அவர்கள் ஏன் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திலேயே நாட்டின் முதன்மைப் பிரச்னையைப் பேச முடியவில்லை என்றால், வேறு எங்குதான் பேசுவது?

மக்களைத் தூண்டிவிட்டு, அவர்கள் மீது தடியடி நடத்தவும், பயமுறுத்தவும், சிறையில் அடைக்கவும் இந்த அரசாங்கமே திட்டமிட்டு அராஜகத்தை உருவாக்குகிறது.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

நேற்று நாங்கள் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேச முற்பட்டபோது எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, நாடாளுமன்ற வளாகத்தை விட்டே வெளியேற முடியாதபடி சிறைபோல எங்களைப் பூட்டி வைத்தனர்.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த நாட்டின் சட்ட ஒழுங்கையும் ஜனநாயகத்தையும் காக்க விரும்பவில்லை. மாறாக நாடு அராஜகத்தை நோக்கிச் செல்வதையே விரும்புகிறார்கள். அரசின் இந்த அடக்குமுறைப் போக்கை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *