தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு துறைகளைச் சேர்ந்து முக்கிய பிரமுகர்கள் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இன்று நடிகர்கள் அதர்வா மற்றும் கவின் ஆகியோரும் தனித்தனியாக முதலமைச்சர் விஜயை சந்தித்து குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த பதிவுகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
முதலமைச்சர் விஜயை சந்தித்த பிறகு நடிகர் கவின் தனது சமூக வலைதளப்பதிவில் உணர்ச்சிகரமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதில், சில மனிதர்கள் தங்களின் செயல்பாடுகள் மூலமாக மற்றவர்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பவர்களாக இருப்பார்கள் என்றும், காலம் அவர்களின் பொறுப்புகளை மாற்றினாலும், அவர்களின் எளிமை, பணிவு மற்றும் மனிதநேயம் மாறாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுவயதிலிருந்தே திரையில் பார்த்து ரசித்த ஒருவரை, இன்று தமிழகத்தின் முதலமைச்சராக மக்களுக்கு சேவை செய்யும் நிலையில் காண்பது மிகவும் பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவாக இருக்கும் என்றும், நீண்ட நாட்களாக மனதில் இருந்த விருப்பம் இன்று நிறைவேறியதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் அதர்வாவும் தனது சமூக வலைதளப்பதிவில் தமிழகத்தின் முதலமைச்சரை நேரில் சந்தித்தது தனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்றும், எந்த உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் அவர் தங்களுக்கு என்றும் அன்பான விஜய் அண்ணா தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது வாழ்க்கையின் முக்கியமான தருணத்திற்கு முன்பாக முதலமைச்சரின் வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு தனது மனதில் மிகுந்த நேர்மறையான உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த வாய்ப்பை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்தும் அவர் பதிவு வெளியிட்டுள்ளார். அதர்வா நடித்துள்ள இதயம் முரளி திரைப்படம் நாளை வெளியாகிறது.
திரைப்பட நடிகராக பல ஆண்டுகள் மக்களின் ஆதரவை பெற்ற விஜய், தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாக திரைப்படத் துறையைச் சேர்ந்த பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அண்மைக் காலமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுடன் முதலமைச்சர் விஜய் சந்தித்து வரும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதன் மூலம் அவர்களுடனான நல்லுறவும், மரியாதை பரிமாற்றங்களும் வெளிப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதர்வா மற்றும் கவின் ஆகியோரின் இந்த சந்திப்பு, அவர்களின் ரசிகர்களிடமும் சமூக வலைதளங்களிலும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
