நடிகர் தனுஷ் அறிமுகப்படுத்தியதாக சொல்லப்பட்ட ரசிகர் மன்றக் கொடி பற்றி சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. விஜய் நடிகராக இருந்தபோது ரசிகர் மன்றக்கொடி இப்படித்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதை அடுத்த கட்ட அரசியலுக்கான முதல் அடி, தனுஷ் சர்வ நிச்சயமாக அரசியலுக்கு வருகிறார் என்பதாக அறுதியிட்டு செய்திகள் சொல்லப்பட்டன.

இப்படி அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியாக விஜயகாந்த், விஜய் ஆகியோர் வரிசையில் விஜய்யும் சுட்டிக்காட்டப்பட இதன் உண்மை குறித்து விசாரித்தோம்.
சமீப காலங்களில் தனுஷ் ரசிகர் மன்றத்தில் அதிக அக்கறை காட்டி வருகிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஏரியா வாரியாக ரசிகர்களை வரவழைத்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு உணவளித்து உபசரித்து வருகிறார்.
அப்படி போன ஆண்டும், இந்த ஆண்டுமே நிறைய முறை ரசிகர் சந்திப்பு நடந்து விட்டது.
ஒவ்வொரு மாவட்டத்தின் தலைவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அவருக்கு பரிச்சயம் ஆகிவிட்டது. தன்பால் பேரன்பு கொண்ட ரசிகர்களுக்கு இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என தனுஷ் நினைக்கிறார்.
இது இப்படியிருக்க, தனுஷ் கொடியை அறிமுகப்படுத்தியது பற்றியும், இது அடுத்த கட்ட அரசியலுக்கான ஆயத்தமா என்று தனுஷின் நெருங்கிய நண்பரும் ரசிகர் மன்றத்தின் முக்கியமானவரும், இயக்குநரருமான சுப்பிரமணிய சிவா அவர்களிடம் பேசினோம்.

“தனுஷ் அவர்களுக்கு அரசியல் வரும் எண்ணம் துளியும் கிடையாது. இந்த கொடி எங்கள் ரசிகர் மன்றத்தில் 13 வருடங்களாக இருக்கிறது.
ரசிகர் மன்ற நிகழ்ச்சிகள், தனுஷ் – ரசிகர் சந்திப்பு, அவரின் புது படங்கள் ரிலீஸ் ஆகும்போது இந்த கொடியை தான் பல வருடங்களாக உபயோகித்து வருகிறோம்.
இப்போது காரின் முகப்பில் இந்தக் கொடியை சொருகி வைக்கவும், தனுஷ் படத்தின் பின்னணியில் இந்தக் கொடியை வைக்கவும் சட்டென்று சமூக தளத்தில் பிரபலமாகிவிட்டது.
எது எந்த சமயம் சமூக வலைதளத்தில் முன்னுரிமை பெறும் என்பது நாம் அறியவே முடியாத விஷயம் அல்லவா! அப்படி ஆகிவிட்டது அவ்வளவுதான்.
தனுஷ் அவர்களுக்கு அரசியலில் ஈடுபட கொஞ்சம் கூட ஆர்வமில்லை. அதற்கான வாய்ப்பே கிடையாது. அவருக்காக வரிசையில் படங்கள் காத்திருக்கின்றன.
இதற்கு மேலும் அவர் சில படங்கள் செய்வது பற்றிய ஆலோசனையில் இருக்கிறார். இறுதியாக தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்… தனுஷ் அவர்களிடம் அரசியல் முனைப்பு என்பது இல்லை ” என்றார்.