ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து வளைகுடா மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது நாட்டிற்கு அருகில் இருக்கும் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடி இருக்கிறது. மற்றொரு புறம் ஈரானுக்குள் எந்த கப்பலும் செல்ல விடாமல் அமெரிக்கா முற்றுகை செய்துள்ளது. ஈரான் துறைமுகத்திற்குள் செல்லும் கப்பல்களை அமெரிக்க கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக ஈரான் அனுமதி இன்றி செல்லும் ஆயில் மற்றும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவின் இந்த செயல்களால் வளைகுடா மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி அருகில் ஆயிரக்கணக்கான சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த கப்பல்கள் மாதக்கணக்கில் அங்கு நின்றுகொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான கப்பல்களில் மாலுமிகளாக பணியாற்றுபவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் எப்போது தங்களுக்கு என்ன நடக்குமோ என்று தெரியாமல் சரியாக உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் அவர்களது கப்பலுக்கு மேலே ட்ரோன்களும், ஏவுகணைகளும் பறந்து செல்வதை பார்த்து எப்போது தங்களது கப்பல் மீது விழுமோ என்ற அச்சத்தில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான கப்பல் மாலுமிகள் வளைகுடா மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் இருப்பதாக இந்திய மாலுமிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வளைகுடாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயங்கும் கப்பல்கள் இப்போது ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்கள், செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.
தொழில்நுட்ப ரீதியாக ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருந்தாலும் அதில் பயணம் செய்வது ஆபத்து மிகுந்ததாக மாறி இருக்கிறது.