ஐபில் தொடரில் நேற்று (மே-18) நடைபெற்ற சென்னை vs ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டி சென்னை அணிக்கு ஒரு வாழ்வா, சாவா போட்டியாக பார்க்கப்பட்ட போதிலும், 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சென்னை அணி. இதன் மூலம் பிளே ஆப் வாய்ப்பும் கிட்டத்தட்ட முடிந்தது.

இந்தத் தோல்விக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ருதுராஜ், “ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும், நெருக்கமாகவும் சென்றது. 20 ஓவர் போட்டிக்கு இது ஒரு நல்ல பிட்ச். ஆட்டம் முழுவதும் பிட்ச்சின் தன்மை மாறவே இல்லை. இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு 180 ரன்கள் என்பது ஒரு நல்ல சவாலான இலக்குதான்.
சில வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டாலும், எங்கள் வீரர்களின் போராட்டக் குணத்தை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். ஒரு விக்கெட்டை வீழ்த்திய உடனே, அந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி எதிரணிக்கு அடுத்தடுத்து அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அதை இன்று எங்களால் செய்ய முடியாமல் போனதே பின்னடைவு.
எங்களிடம் சில முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும், இருந்த வீரர்களை வைத்து எங்களால் முடிந்த சிறந்த காம்பினேஷனுடன் சிறப்பாகவே போராடினோம். அனைவரும் தங்கள் முழு உழைப்பையும் கொடுத்தனர்.
அணியில் நிறைய நேர்மறையான விஷயங்கள் உள்ளன. சஞ்சு சாம்சனின் வருகை அணிக்கு மிகப்பெரிய பலம். அவர் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். கார்த்திக் சர்மாவும் இன்றும் ஒரு அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

காயத்தால் சில முக்கிய வீரர்களைத் தவறவிட்டது உண்மைதான். நிச்சயமாக நாங்கள் ஒரு புதிய அணியைக் கட்டமைத்து வருகிறோம்.
இந்தச் சீசனில் சொந்த மைதானத்தில் சில போட்டிகளில் தோற்றிருந்தாலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நாங்கள் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறோம். அடுத்த ஆண்டு இன்னும் பலமான, ஒரு புதிய சிஎஸ்கே அணியாக நிச்சயம் மீண்டெழுவோம்,” என்று பேசியிருந்தார்.