மும்பை அருகில் உள்ள தகானு தனிவாரி என்ற இடத்தில் லாரி ஒன்று திருமணத்திற்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் 50 பேர் இருந்தனர்.
மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரி சாலையின் அடுத்த பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அப்படி செல்ல யுடெர்ன் எடுக்க ஒரு கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். அந்த ஒரு கிலோமீட்டர் தூரத்தைச் சேமிப்பதற்காக லாரி டிரைவர் வாகனத்தைத் தவறான வழியில் ஓட்டினார்.
அந்நேரம் அந்த வழியாக டிரைலர் லாரி ஒன்று எதிர் திசையில் இருந்து வந்தது. அந்த டிரைலர் லாரி திருமண கோஷ்டி சென்ற லாரி மீது மோதிக்கொண்டது. அதோடு அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனமும் இதில் மோதிக்கொண்டது. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் கிராமத்து மக்கள் ஓடி வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
டிரைலர் லாரியின் கண்டெய்னர் திருமண கோஷ்டி சென்ற வாகனம் மீது மோதியதில் அந்த வாகனம் கடுமையாகச் சேதம் அடைந்தது. போலீஸாரும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டதில் 13 பேர் உயிரிழந்திருந்தனர்.
மேலும் 27 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 16 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “‘சம்பவம் சாலையின் வளைவான பகுதியில் நடந்துள்ளது. எதிரில் லாரி வந்ததை டிரைலர் லாரி டிரைவர் கவனிக்கவில்லை என்று தெரிவித்தார். திருமண நிச்சயதார்த்தம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றபோது இந்த விபத்து நடந்தது.
இவ்விபத்து குறித்து கேள்விப்பட்ட முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.